ஆளுநர் நிகழ்ச்சியில் ஜெயக்குமாரையும் வளர்மதியையும் சந்தித்தேன்.. கூட்டணி பற்றி பேசலையே! பிரேமலதா
சென்னை: தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் முன்னர் அரசியல் கட்சியினர் யோசிக்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா அதிரடியாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி முறிந்துவிட்ட நிலையில் அதை ஒட்ட வைக்க சிலர் முயற்சிப்பதாக தெரிகிறது. ஆனால் அதிமுகவோ தாங்கள் எடுத்த முடிவில் கறாராக உள்ளனர்.

ஆனால் பாஜக நிர்வாகிகளும் அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்த கட்சியினரும் கூட்டணி முறியவில்லை, மீண்டும் புதுப்பிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என கூறி வருகிறார்கள். இந்த நிலையில் கூட்டணி விவகாரத்தில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி, எந்த நிலைப்பாட்டில் கட்சி உள்ளது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பிரேமலதா கூறுகையில் தேர்தலுக்கு இன்னும் 6 மாசம் இருக்கு. இன்னமும் எந்த கட்சியும் தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. தேர்தல் வரும் போது தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்போம்.
எந்த தொகுதி, எத்தனை தொகுதி என்பதும் அப்போதுதான் தெரியவரும். பாஜகவுடன் கூட்டணி செல்வதாக அறிவித்ததும் அதிமுகதான், கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்ததும் அதிமுக. இதில் தேமுதிகவுக்கு எந்த பங்கும் இல்லை. ஏன் பாஜகவுடன் கூட்டணி சென்றார்கள்? கூட்டணியில் இருந்து தற்போது ஏன் வெளியேறினார்கள் என்பதை அதிமுகவிடம்தான் கேட்க வேண்டும்.
அண்ணாவை பற்றி அண்ணாமலை பேசியதுதான் கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேற காரணம் என ஒரு தரப்பினரும், இல்லை வேறு காரணம் என மற்றொரு தரப்பினரும் கூறியிருந்தனர். ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி ஆகியோரை சந்தித்தோம். அப்போது அவர்கள் கூட்டணி தொடர்பாக எதையும் சொல்லவில்லை.
தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி அமைந்தால் அதில் தேமுதிக இடம்பெறுமா என்பது தேர்தலுக்கு முன்கூட்டியே கேட்கப்படும் கேள்வி. தேமுதிகவின் நிலைப்பாடு டிசம்பரில் அல்லது ஜனவரியில் சொல்லிவிடுவோம். கச்சத்தீவு பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை, காவிரி பிரச்சினை, மதுரையில் எய்ம்ஸ் என பாஜக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே மத்திய அரசுடன் கூட்டணி வைக்கும் போது அனைத்து கட்சிகளும் யோசிக்க வேண்டும்.
தமிழகத்திற்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களோடுதான் கூட்டணி என ஒவ்வொரு கட்சியும் முடிவு எடுத்தால் நிச்சயம் தமிழகத்திற்கு நல்லது நடக்கும். எனவே தமிழகத்திற்கு எந்த கட்சி நல்லது செய்கிறதோ அந்த கட்சியோடுதான் தேமுதிக கூட்டணி அமைக்கும் என பிரேமலதா தெரிவித்திருந்தார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications