10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த்
சென்னை: தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகான முதல் கூட்டம் என்பதால் கட்சியின் செயல்பாடு, சீர்திருத்தம் உள்ளிட்டவை குறித்து இன்று ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தேமுதிக கூட்டும் முதல் அதிகாரப்பூர்வ உள்கட்சி கூட்டம் இது என்பதால், அரசியல் வட்டாரங்களில் இக்கூட்டம் மிகுந்த கவனம் பெற்றுள்ளது.

தேர்தல் முடிவுகளுக்குப் பின் கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகத் தலைமை நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, 3 முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் வாக்கு வங்கி, கூட்டணி பலம் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகள் ஆற்றிய பணிகள் குறித்து மண்டல வாரியாகப் பிரேமலதா விஜயகாந்த் ஆய்வு செய்து வருகிறார்.
தேர்தலில் தொய்வாகச் செயல்பட்ட மாவட்டங்களில் நிர்வாக மாற்றங்கள் செய்வது, புதிய முகங்களுக்குப் பொறுப்புகளை வழங்குவது மற்றும் கட்சியின் கட்டமைப்பை அடிமட்ட அளவில் பலப்படுத்துவது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் இறுதியானவை அல்ல, அரசியல் களம் மாறக்கூடியது என்ற நோக்கில், அடுத்ததாக வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் கட்சியின் பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எட்டப்படவுள்ளன.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்துடன் கட்சியின் பொருளாளரும் ராஜ்யசபா எம்.பி-யுமான எல்.கே.சுதீஷ், இளைஞரணி செயலாளர் வி.விஜயபிரபாகரன், தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள மாவட்டச் செயலாளர்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்துள்ள சூழலில், தங்கள் கட்சியின் எதிர்காலப் பயணத்தை வடிவமைக்கவும், தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் பிரேமலதா விஜயகாந்த் எடுக்கும் புதிய முடிவுகள் என்னென்ன என்பது இன்று வெளியாகும் தீர்மானங்களின் மூலம் தெரியவரும்.












Click it and Unblock the Notifications