ஆளுநர் தமிழ்நாட்டை நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டாரு.. முகமே சுண்டிப்போச்சு.. பிரேமலதா பேட்டி!
சென்னை: ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உதவியோடு தான் கள்ளச் சாராய விற்பனை நடைபெறுகிறது என்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
கள்ளகுறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மனு அளித்துள்ளார். பின்னர் ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், "கள்ளக்குறிச்சியில் இத்தனை உயிர்கள் போன பிறகு, இன்றைக்கு இந்த அரசு ஆயிரக்கணக்கான லிட்டர் சாராயத்தை அழித்துவிட்டதாகக் கூறுகிறது.

இப்போது எடுத்த இந்த நடவடிக்கைகளை முன்கூட்டியே ஏன் எடுக்கவில்லை? போன வருடம் இதேபோன்ற நிகழ்வு நடந்தது. அதன்பிறகு சரியான நடவடிக்கை எடுத்து தடுத்திருந்தால் இத்தனை உயிர்களை நாம் இழக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது. அரசாங்கம் என்ன செய்கிறது?
கள்ளச் சாராயம் வரக்கூடாது என்பதற்காகத்தான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அப்படி இருக்கும்போது கள்ளச் சாராயம் மீண்டும் ஏன் வருகிறது? இதற்கு யார் துணை போகிறார்கள்? ஆட்சியாளர்கள், அதிகாரிகள், காவல்துறை துணையில்லாமல் நிச்சயமாக கள்ளச் சாராயம் காய்ச்ச முடியாது. ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உதவியோடு தான் கள்ளச் சாராயம் காய்ச்சப்படுகிறது, விற்கப்படுகிறது என்று கள்ளக்குறிச்சி மக்கள் சொல்கிறார்கள்.
ஆளும் கட்சியின் உதவியோடுதான் இதெல்லாம் நடக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மக்களின் வறுமையை பயன்படுத்தி கள்ளச்சாராயம் போன்ற போதை வஸ்துகளை விற்று தமிழகத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளனர். இது குறித்துத்தான் ஆளுநரிடம் முறையிட்டுள்ளோம். ஆளுநரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
அந்த மனுவில் கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். கள்ளக்குறிச்சி விவகாரத்தை சிபிசிஐடி போலீசார் விசாரிப்பதால் உண்மை வெளிவரப் போவதில்லை. எனவே இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்.
ஒரு பக்கம் குடியைக் கொடுத்து கோடிகளில் சம்பாதிக்கிறார்கள். மற்றொருபுரம் மக்கள் உயிரிழக்கிறார்கள். இலக்கு வைத்து மதுபானம் விற்றால் மக்களை காப்பாற்ற முடியாது. சம்பந்தப்பட்ட அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். மதுபான ஆலைகளை மூட வேண்டும். நாங்கள் சொன்னதை ஆளுநர் மிக கவனமாகக் கேட்டார்.
ஆளுநர் முகத்தில் மிகப்பெரிய கவலை தெரிந்தது. இதற்கு முன்பு பல முறை அவரை சந்தித்துள்ளோம். இன்று அவரது முகத்தில் கவலை தெரிந்தது. போதைப் பொருட்களா; தமிழகத்தின் எதிர்காலம் என்ன ஆகப் போகிறதோ என்று ஆளுநர் மன வருத்தத்தோடு தெரிவித்தார். இது கவலைக்குரிய விஷயம் எனக்கூறி எங்களிடம் மிகவும் வருத்தப்பட்டார்." எனத் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தியும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கூட்டணி கட்சியான தேமுதிகவின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உண்ணாவிர போராட்டத்திற்கு நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications