எங்களுக்கு ரூ.100 கோடி நஷ்டம்! பார்த்து பார்த்து கல்யாண மண்டபம் கட்டினோம்! பிரேமலதா ஆதங்கம்!
சென்னை: சென்னை கோயம்பேட்டில் தாங்கள் கட்டிய ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தை இடித்ததன் மூலம் இன்று ரூ.100 கோடி ரூபாய் தங்களுக்கு நஷ்டம் என பிரேமலதா விஜயகாந்த் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் வியர்வை சிந்தி உழைத்து கட்டிய கல்யாண மண்டபம் அது என்றும் அதன் ஒவ்வொரு பணியையும் பார்த்து பார்த்து மேற்கொண்டோம் என்றும் பழைய நினைவலைகளை பகிர்ந்துகொண்டார். விஜயகாந்த் 71வது பிறந்தநாளை ஒட்டி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இதனைக் கூறியுள்ளார்.

மேலும் பிரேமலதா கூறியிருப்பதாவது; ''நாங்க கட்சி ஆரம்பிக்கும் போது சொத்தை விற்றுத்தான் கட்சி ஆரம்பித்தோம். யாரிடமும் ஒரு ரூபாய் வாங்கி கட்சி தொடங்கவில்லை. கேப்டனை பொறுத்தவரை கொடுத்து கொடுத்து பழக்கப்பட்டவர், யாரிடமும் வாங்கிப் பழக்கம் இல்லை. எங்களுக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரும் சொத்தை விற்று யாராவது கட்சி ஆரம்பிப்பாங்களா, ஏன் இப்படி பண்றீங்கன்னு கேட்டாங்க.''
''நான் சொல்லிவிட்டேன், கேப்டன் பார்த்து சம்பாதித்த சொத்து, அதனை அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், நானோ, எனது மகன்களோ கேள்வி கேட்க முடியாது. அவர் எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் எதிர்ப்பு தெரிவித்ததே கிடையாது. கேப்டன் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே செய்துவிடுவேன்.''
''கேப்டன் வியர்வை சிந்தி உழைத்து சேர்த்த பணத்தில் ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் கட்டினோம். இன்னும் சொல்லப்போனால் நான் தான் அதனை பார்த்து பார்த்து கட்டுமான பணிகளை கவனித்துக்கொண்டேன். பாலம் கட்டுவதாக சொல்லி ஒரு தூண் கல்யாண மண்டபம் இருக்கும் இடத்தில் வருவதாக கூறி இடித்துவிட்டார்கள். இப்ப எத்தனை கார் அதில் போகுது.''
''அரசியலுக்கு வரக்கூடாது என மிரட்டல் விடுக்கும் வகையில் இது போல் செய்தார்கள். ஆனால் நானோ கேப்டனோ துளியும் இதற்கெல்லாம் அஞ்சவில்லை. சொத்தை விற்று கட்சி ஆரம்பித்து மதுரையில் பிரம்மாண்ட மாநாட்டை நடத்தினோம். அந்த திருமண மண்டபம் இன்று இருந்திருந்தால் ரூ.100 கோடி சொத்து'' இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தனது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications