திடீர்னு கோபப்பட்ட பிரேமலதா.. "எதையுமே புரிஞ்சிக்க மாட்டீங்களா".. என்னாச்சு.. தடதடக்கும் தேமுதிக
தேமுதிக நிர்வாகிகள் மீது பிரேமலதா வருத்தப்பட்டாராம்
சென்னை: தேமுதிக குறித்த ஒரு செய்தி கசிந்து வருகிறது.. சில மூத்த நிர்வாகிகள் மீது பிரேமலதா கோபத்திலும், வருத்தத்திலும் இருக்கிறாராம்..!
தொகுதி ஒதுக்கீடுகள் நடந்தது முதலே, சில அதிருப்திகள் தேமுதிகவில் ஏற்பட்டன.. அதாவது, விருதாச்சலம் தொகுதியில் கட்சி நிர்வாகிகள் பிரேமலதாவுக்கு சரியாக ஒத்துழைப்பு தரவில்லை, தேமுதிக போட்டியிடாத பல்வேறு மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகரப் பொறுப்பாளர்கள் விருத்தாசலம் தொகுதிக்கு தேர்தல் பணியாற்ற வந்தும், அவர்களுக்கு எந்தவித உதவிகளும் செய்து தரப்படவில்லை.
மேலும், கூட்டணி தலைமை, வேட்பாளர்களுக்கு செலவுக்கு பணம் தந்திருந்தும், அவை முறையாக போய் சேரவில்லை, பல்வேறு இடங்களில் வேட்பாளர்கள், நிர்வாகிகள் இறங்கி வேலை செய்யவில்லை, ஒவ்வொரு வேட்பாளருக்கும், தலா 3 லட்சம் ரூபாய் தருவதாக தலைமையில் இருந்து சொல்லவும், வெறும் 3 லட்சமா? இதை வைத்து கொண்டு என்ன செய்வது? என்ற புலம்பல்கள்.. என இப்படி எத்தனையோ அதிருப்திகள் அந்த கட்சிக்குள் எழுந்து அடங்கின.
வேட்பாளர்கள்
தேமுதிக வேட்பாளர்களுக்கு கட்சி சார்பில் நிதி அளிக்கவில்லை என்றும், சொந்த பணத்தையே வேட்பாளர்கள் செலவு செய்ததாகவும், சிலர் கடன் வாங்கி செலவு செய்ததாவும், எனவே, தேர்தலுக்காக செலவு செய்த பணத்தை கட்சி தலைமை வழங்கினால் நன்றாக இருக்கும் என்று வேட்பாளர்கள் தலைமையிடம் ஒரு கோரிக்கை வைத்திருந்தனர்.
விஜயகாந்த்
இந்த தகவல், விஜயகாந்தின் காதுகளுக்கு எட்டியதும், எந்தெந்த வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்தார்கள் என்ற கணக்கை தருமாறு தலைமை நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் ஒரு உத்தரவு போட்டதாகவும் கடந்த வாரம் செய்திகள் பரபரத்தன. ஆனாலும், வேட்பாளர்கள் பெரிய அளவில் தொகுதிக்குள் தாராளத்தை காட்டி உள்ளதால், அவ்வளவு செலவையும் கட்சி மேலிடம் செட்டில் செய்யுமா என்ற எதிர்பார்ப்பும் எகிறி வருகிறது.
ஆலோசனை
இந்நிலையில், இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.. விழுப்புரத்தில் சில முக்கிய நிர்வாகிகள் ஒரு கூட்டத்தை கூட்டி, மனம் விட்டுபேசினார்களாம்.. அப்போது விஜயகாந்த் கையில் கட்சி இருந்தவரை, எல்லா வகையிலும் உதவி செய்தார்.. நாம என்ன எதிர்பார்க்கிறோமோ அதைவிட அதிகமாகவே விஜயகாந்த் நம்மை கவனித்து கொள்வார்.. ஆனால், இப்போ நிலைமை அப்படி இல்லை.
பணம்
இவர்களிடம் பணம் இல்லாவிட்டாலும், கூட்டணி தலைமைக்கு தந்த பணத்தையாவது பகிர்ந்து தந்திருக்கலாமே... கட்சி தலைமை சிக்கனமாக இருக்கிறதே.. இந்த முறை தேர்தல் களமும் ரொம்ப கடினமா இருந்தது.. சில வேட்பாளர்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு போட்டியிட்டு சமாளிக்க வேண்டி இருந்தது.. ஆனால், தலைமை பெரிசா கண்டுக்கலயே என்று புலம்பினார்களாம்..
வருத்தம்
இந்த விஷயம் பிரேமலதாவுக்கு எட்டி உள்ளது.. அனைத்தையும் கேட்டு ஆவேசப்பட்டுள்ளார்.. மனம் நொந்தும் போனாராம்.. இந்த கட்சிக்காக நான் எப்படி எல்லாம் பாடுபட்டிருப்பேன், இந்த காலகட்டத்தில் எப்படி எல்லாம் துணிந்து இறங்கி வேலை பார்த்திருப்பேன்.. எதையுமே புரிந்து கொள்ளாமல், இவங்களே இப்படி பேசினால் எப்படி? என்று வருத்தப்பட்டாராம்...!
ஆதங்கம்
இதுகுறித்து தேமுதிகவினர் சிலர், "முதல்முறையாக, களத்தில் போட்டியிடுவதால் விருதாச்சலத்தை வென்றாக வேண்டும் என்ற கட்டாயம் பிரேமலதாவுக்கு ஏற்பட்டது.. அதனால்தான் வேற தொகுதிகளுக்கும் அவரால் சென்று பிரச்சாரம் செய்ய முடியவில்லை.. அதேபோல, சுதீஷூக்கும் உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. தன்னந்தனியாளாகவே நின்று பிரேமலதா இந்த தேர்தலை துணிவுடன் சந்தித்ததையும் இவர்கள் நினைத்து பார்க்க வேண்டும்.. கேப்டன் சொன்னபடி செய்துவிடுவார் என்பதால், செலவு செய்த அனைவருக்கும் பணம் சேர்ந்துவிடும்" என்கின்றனர்.