"திருவள்ளுவரின் பன்முகத்தன்மை தனித்து நிற்கின்றன.." பிரதமர் மோடி புகழாரம்
சென்னை: திருவள்ளுவர் தினத்தையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகப் பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.
Recommended Video
உலகெங்கும் உள்ள தமிழர்களால் பொங்கல் திருநாள் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பொங்கல் திருவிழாவின் 2-ம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது..
தமிழகத்தின் கலாச்சார அடையாளமாக திகழும் பொங்கல் விழா! பிரதமர் மோடி வாழ்த்து!
அதேபோல உலக தமிழர்களால் இன்று திருவள்ளுவர் தினமும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகப் பொதுமறையான திருக்குறளை நமக்கு அளித்த திருவள்ளுவருக்குப் பலரும் மரியாதை செலுத்துகின்றனர்.
சென்னை மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ஆளுநர் ரவி, மத்திய இணை அமைச்சர் எல் முருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில், திருவள்ளுவர் தினத்தையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகப் பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.
திருவள்ளுவரின் பன்முகத்தன்மை & அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்பதாகப் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், திருவள்ளுவர் சிலையையும் தான் எடுத்த வீடியோவையும் பிரதமர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில், "திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை & அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.