கடும் மனஉளைச்சல்.. லோன் வாங்கி கட்ட முடியாமல்... கதறி உயிரைவிட்ட ஊழியர்.. சென்னையில் ஷாக்!
சென்னை: சென்னையில் தனியார் நிறுவன ஊழியர் கடன் நெருக்கடியால் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனியார் வங்கி கொடுத்த நெருக்கடியால் தற்கொலை என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கிரெடிட் கார்டு மற்றும் பர்சனல் லோன் மூலம் ரூ.6 லட்சம் வாங்கிய நிலையில் வங்கி ஊழியர்கள் நெருக்கடி கொடுத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
கொரோனா லாக்டவுனால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக ஏராளமான மக்கள் கடனை கட்ட முடியாமல் தவித்து வருகிறார்கள். வேலை செய்வோர் என்றால் வேலையை இழந்தும், சுயதொழில் செய்வோர் என்றால் வருமானத்தை இழந்தும் தவித்து வருகிறார்கள். அதில் இருந்து தற்போது தான் மெல்ல மெல்ல மீண்டு வருகிறார்கள்.
மன உளைச்சல்
6 மாதம் முற்றிலும் வருமானத்தை இழந்த மக்கள், அந்த 6 மாத வருமானத்தை ஈடுகட்ட பலருக்கும் இன்னும் ஓராண்டு வரை கூட ஆகும் நிலை உள்ளது. இதுவே எதார்த்தம். இந்த சூழலில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வாங்கி கடனை அடைக்க முடியாமல் கடும் மனஉளைச்சலில் பலர் தவிக்கிறார்கள். அதில் சிலர் விபரீதமான முடிவையும் எடுத்துள்ளனர். அப்படி ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
பெரவலூர் அருகே
சென்னை பெரவலூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஜவஹர் நகர் முதல் சர்குலர் சாலையில் வசித்து வந்தவர் வசந்தகுமார் வயது 59. இவரது மனைவி சுவேதா. இவர்களுக்கு ஒரு மகன் மகள் உள்ளனர். இருவரும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.
பர்சனல் லோன்
வசந்தகுமார் அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். வசந்தகுமார் இரண்டு வங்கிகளில் கிரெடிட் கார்டு மற்றும் மேலும் ஒரு வங்கியில் பர்சனல் லோன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கட்ட சொல்லி தொல்லை
கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையில்லாமல் பணக்கஷ்டத்தில் இருந்ததால் வசந்தகுமார் தவணையை சரியாக கட்டவில்லை. வங்கிகளால் நியமிக்கப்பட்ட ஏஜென்டுகள் தொடர்ந்து வசந்தகுமாரிடம் பணம் கேட்டு தொல்லை செய்து வந்தார்களாம்.
தூக்குபோட்டு தற்கொலை
இதனால் மனவேதனை அடைந்த வசந்தகுமார் நேற்று இரவு வீட்டின் சமையல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை பெரவள்ளூர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.