தனியார் பள்ளிகள் முறைப்படுத்தல் சட்டம் மற்றும் விதிகள்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: தனியார் பள்ளிகள் முறைப்படுத்தல் சட்டம் மற்றும் விதிகளை அமல்படுத்துவதில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளை முறைப்படுத்துவது தொடர்பாக 2018ம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முறைப்படுத்தல் சட்டம் இயற்றப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் விதிகள் வகுக்கப்பட்டன.

சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் பள்ளிகள் துவங்க அரசு அனுமதி பெற வேண்டும், சிறுபான்மை அந்தஸ்து கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகள், சிறுபான்மையினருக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளை பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, பல்வேறு திருச்சபைகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், 1973-ல் கொண்டுவரப்பட்டு, 1975-ல் உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட பல பிரிவுகள், புதிய சட்டத்தின் மூலமும், விதிகளின் மூலமும் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. 1975- ம் ஆண்டு உத்தரவை எதிர்த்த வழக்குகளை உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்துக்கே மாற்றியது. அப்போது புதிய சட்டம் கொண்டு வரப்பட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையேற்று 1973ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்துவதில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என 2012ல் உத்தரவிடப்பட்டது என்றார்கள்.
இந்நிலையில், இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஆட்சேபம் தெரிவித்த தமிழக அரசு, உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த விதிகள் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், சிறுபான்மையல்லாத கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று கோர்டில் தெரிவித்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள், அடுத்த கல்வியாண்டு துவங்க உள்ளதை கருத்தில் கொண்டு, புதிய சட்டம் மற்றும் விதிகளை அமல்படுத்துவதில் ஜூன் 15ம் தேதி வரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்குகளின் விசாரணையை ஜூன் 5ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.












Click it and Unblock the Notifications