மேயர் ஆனதற்குப் பின்னால் சென்னையில் இவ்வளவு மாற்றங்களா? - சொல்கிறார் மேயர் பிரியா ராஜன்
சென்னை: மேயராக பதவியேற்று ஓராண்டுக்காலத்தைக் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவு செய்துள்ளார் பிரியா ராஜன்.
இவரது, ஆட்சிக்காலத்தில் சென்னையின் முகம் பல்வேறு நல்ல மாற்றங்களைப் பெற்றுவருகிறது. முதல்வர் ஸ்டாலினின் கனவுத் திட்டமான 'சிங்கார சென்னை யை உருவாக்குவதே எனது லட்சியம்' என்கிறார் மேயர் ப்ரியா.

மேயர் பதவி செய்த மாற்றங்கள்: சாதாரண பெண்மணியாக இருந்த பிரியாவுக்கும் மேயர் பிரியாவுக்கும் என்ன வித்தியாசத்தை உணருகிறீர்கள் என்று கேட்டால், "இதற்கு முன்னால் சென்னையை ஒரு சராசரி பொதுமக்களாக இருந்து பார்த்தேன்.
மேயரான பிறகுதான் சென்னை மாநகராட்சி எவ்வளவு பணிகளைச் செய்கிறது. எவ்வளவு திட்டங்களை மக்களுக்காகச் செயல்படுத்தி வருகிறது. அதற்கு யார் யார் எல்லாம் இரவு பகல் பார்க்காமல் உழைக்கிறார்கள். அவர்களின் சேவை என்ன? அர்ப்பணிப்பு என்ன? எனப் பல விஷயங்களைப் புரியத் தொடங்கி உள்ளது" என்கிறார் ஒரு தேர்ந்த நிர்வாகியாக.
சென்னை மாநகராட்சி போட்ட 2023 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று பேசு பொருளாக மாறியுள்ளது. எனவே அவரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். சிரிப்பு குறையாத முகத்துடன் அவர் பல திட்டங்களைப் பற்றித் தெளிவாக விளக்கம் அளித்தார்.
"மற்ற மாநகராட்சிகளைவிடச் சென்னை மாநகரத்தின் மேயராக இருப்பது பெருமை. காரணம், ஒரு காலத்தில் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் வகுத்த பதவி இது. ஆகவே இந்த மேயர் நாற்காலிக்கு சில சிறப்புகள் உண்டு.
ஸ்டாலின் மேயராக இருந்தபோது சென்னையின் முகத்தை அவர்தான் மொத்தமாக மாற்றிக் காட்டினார். அவர் மேயராக ஆவதற்கு முன்னாள் இருந்த சென்னை வேறு. அவர் மேயராக வந்த பின்னால் உருவான சென்னை வேறு. இரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
இன்றைக்குச் சென்னையில் எவ்வளவு பூங்காக்களைப் பார்க்கிறோம். எவ்வளவோ மேம்பாலங்கள் பார்க்கிறோம். இவை அனைத்தும் அவரது ஆட்சிக் காலத்தில் உருவானவை" என்கிறார்.

எனக்குப் பெரிய சவால்தான்: இவர் கடந்த 2022 ஆம் ஆண்டுதான் மேயராக பதவியேற்றார். இந்த மார்ச் மாதத்துடன் ஒரு ஆண்டுக்காலத்தை நிறைவு செய்திருக்கிறார். இந்தப் பயண அனுபவம் எப்படி இருந்தது எனக் கேட்டால், "இந்த ஒரு ஆண்டு பெரிய சவாலானதுதான். எனக்கு இந்தப் பதவி புதியது. நான் நிறைய கற்றுக் கொண்டேன்.
இந்தப் பதவியில் எனக்கு முன்னாள் எங்கள் கட்சியின் சார்பாக இன்றைய முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் மா.சுப்பிரமணியனும் இருந்துள்ளனர். ஆகவே அதை நான் சரியாகச் செய்து முடிக்க வேண்டும் என்ற கூடுதல் பொறுப்பு இருந்தது. அதை நான் சமாளித்து முன்னேறப் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்" என்கிறார்.
அவரிடம் கல்விக்கு அதிக முக்கியத்துவம் பட்ஜெட்டில் தரப்பட்டுள்ளது ஏன் என்ற கேள்விக்கு, "முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த உடனேயே கல்வியும் மருத்துவமும் எனது இரு கண்கள் என்றார். அவரது விருப்பத்தைப் போலவே எனக்கும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
ஆகவே இந்த 2023 ஆம் ஆண்டு மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் கல்விக்கு அதிக நிதியை ஒதுக்கினோம். இன்றைய தலைமுறையினருக்குக் கல்வி நிறையவே முக்கியம். எந்த ஒரு காலகட்டத்திலும் ஒரு நபருக்குக் கைகொடுக்கும் விஷயம் கல்விதான்.
அதனால்தான் நீட் போன்ற தேர்வுகளுக்காகப் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு மாநகராட்சி சார்பாக நாங்கள் நிதி உதவி அளிப்பதாகக் கூறியுள்ளோம். அதேபோல எல்லா பள்ளிக் குழந்தைகளுக்கும் 'ஹேப்பி கிளாஸ்' நடத்த உள்ளோம்.

ஸ்டாலினைப் பின்பற்றி வந்த ஐடியா: பல்வேறு குடும்ப பின்புலத்திலிருந்து குழந்தைகள் அரசுப் பள்ளிக்குக் கல்வி கற்க வருகிறார்கள். அவர்கள் வீட்டின் சூழல் எப்படி உள்ளது என்பது நமக்குத் தெரியாது. ஆகவே அவர்கள் பள்ளிக்குள் நுழைந்தவுடன் அவர்களின் மனநிலையைச் சீராக்கி, படிப்பில் கவனம் செலுத்த வைக்க இந்த 'ஹேப்பி பயிற்சி வகுப்புகள்' பயன் தரும். இந்தத் திட்டங்கள் எல்லாம் என் மனதிற்குப் பிடித்த திட்டங்களாக நினைக்கிறேன்.
அதேபோல் காலை உணவுத்திட்டத்தை முதல்வர் செயல்படுத்திக் கொடுத்துள்ளார். அவரைப் பின்பற்றி மாலை வகுப்புகளில் 'ஸ்நாக்ஸ்' கொடுக்க முடிவு செய்துள்ளோம். ஏனெனில் ஐந்தரை மணிக்குப் பிறகும் சில ஸ்பெஷல் கிளாஸ் நடைபெறுகின்றன.
மாணவர்கள் தொடர்ந்து வகுப்பறையில் இருப்பார்கள். அப்போது பசியுடன் இருந்தால், அந்தச் சிறப்பு வகுப்புகளுக்கு நல்ல பலன் கிடைக்காது. காரணம், அவர்கள் பசி மயக்கத்தில் பாடத்தில் கவனம் செலுத்த வாய்ப்பு இல்லை. அதை உணர்ந்தே இந்த ஸ்நாக்ஸ் தர முடிவு எடுத்தோம்.
வயிறு ஃபுல் ஆனால்தான் மைண்ட் ஃபுல் ஆகும். அந்த நோக்கத்தில் செய்யப்பட்டதுதான் இந்தச் சிற்றுண்டி உணவு. சிற்றுண்டியாகச் சுண்டல், வேர்க்கடலை எனச் சத்தான உணவுகளைத் தர உள்ளோம்" எனச் சொல்கிறார்

சிங்கார சென்னை 2.ஓ திட்டம்: "சிங்கார சென்னை 2.ஓ திட்டத்தின் மூலம் சென்னையில் சாலைகள் அமைக்க மட்டுமே 450 கோடி ஒதுக்கி உள்ளோம். இந்தச் சாலை அமைக்கும் பணி ஒவ்வொரு பகுதியாக நிறைவேற்றப்பட்டும் வருகிறது. ஒரே நேரத்தில் இப்பணிகள் நடந்தால் சென்னை முடங்கிவிடும். அதை மனதில் கொண்டு பகுதி பகுதியாகச் செய்துவருகிறோம்.
இதே திட்டத்தின் கீழ் 28 பூங்காக்களை 'ஸ்பாஞ்ச் பார்க்' ஆக மாற்றி வருகிறோம். அதாவது அங்கே புதியதாக நாங்களே ஒரு குளத்தை உருவாக்குகிறோம். அதில், மழை நீரைச் சேமிக்கத் திட்டமிட்டுள்ளோம். அப்படித்தான் பெரம்பூரில் முரசொலி மாறன் பூங்காவை மாற்றும் பணி நடந்துவருகிறது.
இப்போது திரு.வி.க பூங்கா சிறப்பாக மாற்றப்பட்டுள்ளது. அதை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில்தான் திறந்துவைத்துள்ளார். சென்னையில் 17 மேம்பாலங்களைக் கட்டி வருகிறோம். அதில் 4 முடிந்துவிட்டன. செயற்கை வண்ண நீரூற்று பூங்கா, ஆண், பெண்களுக்கான தனித்தனியான பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் 9 ஏக்கர் பரப்பளவில் சென்னை திருவிக பூங்கா புதுப்பொலிவுடன் மாற்றப்பட்டுள்ளது. இதற்காக ரூ.18 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

பூங்காக்களை புனரமைக்க இவ்வளவு கோடியா? இப்படி குளங்கள் அமைத்தால், மழைநீர் சேமிக்கப்படும். இதனால், நிலத்தடி நீர் சேமிக்கப்பட்டு, வறட்சி வராமல் தடுக்கத் திட்டமிட்டுள்ளோம். மழைக்காக அடையாறு பகுதியில் மட்டுமே 55 ஆயிரம் மரக் கன்றுகளை நட்டுள்ளோம். ஒரு வருடம் ஆகிவிட்டது. அந்த மரக் கன்றுகள் நன்றாக வளர்ந்துள்ளன.
நீர்நிலைகளைப் புனரமைக்க மட்டும் 20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆறு மிகப் பெரிய புராஜெக்ட். இது 2024 இல் தான் முடியும். அது மட்டும் நடந்துமுடிந்துவிட்டால், மணலி, திருவொற்றியூர் சுற்றுவட்டார மக்கள் பயன்பெறும் படி இருக்கும்.
இந்த மாநகராட்சி தூய்மைக்கும் சுகாதாரத்திற்கும் அதிக முக்கியத்துவம் தருகிறது. அதனடிப்படையில் பெருங்குடியில் 'பயோ மைனிங்' சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு ஆண்டில் இப்பணிகள் முடிவடையும். 225 ஏக்கர் பரப்பில் இதைச் செய்து வருகிறோம். கழிவுகளை மறுசுழற்சி செய்து, அதன் மூலம் நாங்கள் தூய்மையான சென்னையை உருவாக்கி வருகிறோம். கொடுங்கையூரில் 630 கோடி ரூபாயில் ஒரு 'பயோ மைனிங்' திட்டம் தொடங்கி உள்ளது.

ஸ்டாலினின் கனவுதான் முக்கியம்: சென்னை அரசுப் பள்ளிகளை நாங்கள் ஸ்மார்ட் க்ளாஸ் ஆக மாற்றி வருகிறோம். இப்போதைக்கு சில இடங்களில் மட்டும் செயல்படுத்தி உள்ளோம். 'நமக்கு நாமே திட்டம்' மூலம் தன்னார்வலர்கள் முன்வரும் பட்சத்தில் சென்னை முழுக்க உள்ள அரசுப் பள்ளிகளை ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றத் திட்டமிட்டு வருகிறோம்.
முதல்வர் ஸ்டாலினின் கனவு சென்னையைச் சிங்கார சென்னையாக மாற்றுவது. அதை நாங்கள் தலையான பணியாக நினைத்து சென்னையின் முகத்தையே நவீனமாக்கி வருகிறோம். 5 ஆண்டுகளில் இப்போது உள்ள சென்னையைவிட, சர்வதேச தரத்திலான சென்னையை உருவாக்குவோம். அதுவே முதல்வரின் கனவும்" என்கிறார்












Click it and Unblock the Notifications