அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்.. அதிரடியாக தடை போட்ட ஹைகோர்ட்.. எந்த விவகாரம் தெரியுமா?
சென்னை: சட்டவிரோத மணல் விற்பனை முறைகேடு தொடர்பாக தனியார் நிறுவனத்தை சேர்ந்த பங்குதாரர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை செயல்படுத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, சோதனைகள் நடத்தி பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளது.

இது குறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் ஆர். எஸ். கன்ஸ்ட்ரைக்சன் நிறுவனத்தின் பங்குதாரர்களான சென்னையை சேர்ந்த ராஜ்குமார், புதுக்கோட்டையை சேர்ந்த சண்முகம் ராமச்சந்திரன் மற்றும் திண்டுக்கலை சேர்ந்த ரெத்தினம் ஆகியோருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
சம்மனை ரத்து செய்யக்கோரி மூவரும் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது மனுதாரர்கள் சார்பில், அமலாக்கத்துறையின் வழக்கில் தங்களது பெயர் சேர்க்கப்படாத நிலையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவசர கதியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.
அமலாக்கத்துறை தரப்பில், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் மூவரும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. மேலும், சம்மனை ரத்து செய்யக்கூடாது என்றும் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
இந்நிலையில், இன்று நீதிபதிகள் வழங்கியுள்ள உத்தரவில், மறு உத்தரவு வரும் வரை சம்மனை செயல்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.











Click it and Unblock the Notifications