சொத்து பத்திரங்கள் ஆவணங்கள் ரெடி? பத்திரப்பதிவு செய்வோருக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன் தேவை: பெயிரா
சென்னை: சொத்து சம்பந்தமான ஆவணங்களை இன்றைய தினம் பதிவு செய்ய திட்டமிடும் பொதுமக்களுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன் வழங்கிட ஆவண செய்ய வேண்டும் எனறு தமிழ்நாடு பதிவுத்துறை தலைவருக்கு பொதுமக்கள் நலன் கருதி பெயிரா கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
2 நாட்களுக்கு முன்பு, தமிழகப் பதிவுத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.. அதில், மார்ச் மாதத்தின் 8, 15, 22 மற்றும் 29 ஆகிய 5 சனிக்கிழமைகளிலும் தமிழகத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என்றும், எனவே மேற்கண்ட நாட்களில் பத்திரப்பதிவு செய்து பொதுமக்கள் பயன்பெறும் விதமாகப் பதிவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்பதிவு டோக்கன்கள்
இந்நிலையில், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, இன்று சுபமுகூர்த்த தினத்தை (திங்கட்கிழமை 03.03.2025) முன்னிட்டு சொத்து சம்பந்தமான ஆவணங்களை பதிவு செய்ய திட்டமிடும் பொதுமக்களுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன் வழங்கிட ஆவண செய்ய வேண்டும் என தமிழ்நாடு பதிவுத்துறை தலைவருக்கு பொதுமக்கள் நலன் கருதி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "இன்று திங்கட்கிழமை 03.03.2025 சுபமுகூர்த்த தினம் என்பதால், இந்நன்னாளில் பெரும்பாலான பொதுமக்கள் தமிழகத்தில் சொத்துக்கள் வாங்குவது சம்பந்தமான ஆவணங்களை பதிவு செய்வதில் மிகுந்த ஆர்வமும் - மகிழ்ச்சியும் மற்றும் மனதிருப்தியும் அடைகின்றார்கள்.
தாம்பரம், நீலாங்கரை சார் பதிவாளர் அலுவலகம்
இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் குறிப்பாக பம்மல், பல்லாவரம், திருப்போரூர், படப்பை, செங்கல்பட்டு, ஆவடி, கூடுவாஞ்சேரி, வேளச்சேரி, தாம்பரம், திருப்பெரும்புதூர், நீலாங்கரை உள்ளிட்ட பல அலுவலகங்களில் ஆவண பதிவு செய்ய முன்பதிவு டோக்கன் இல்லை.
இதனால் பெரும்பாலான பொதுமக்களுக்கு முன்பதிவு டோக்கன் கிடைக்க பெறாமல் ஏமாற்றத்துக்கு உள்ளாகிறார்கள் ஆகவே அவர்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் பதிவுத்துறை மதிப்பளித்து 03.03.2025 சுபமுகூர்த்த தினமான இன்று ஆவண பதிவுகளை அனைத்து மக்களும் மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் தேவையான அளவிற்கு கணிசமாக முன்பதிவு டோக்கன்களை உயர்த்தி வழங்க வேண்டுகிறோம்.
கூடுதல் டோக்கன்கள்
இதன் மூலம் பதிவுத்துறைக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன் பொதுமக்களின் விருப்பமும் நிறைவேறும். தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் இதனை கூடுதல் கவனத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் மேற்கண்ட சுப முகூர்த்த தினத்தில் தேவையான அளவிற்கு கூடுதலாக முன்பதிவு டோக்கனை கணிசமாக உயர்த்தி வழங்கிட வழிவகை செய்ய வேண்டும் என அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications