'கறுப்பர் கூட்டம்' சுரேந்திரனை விரட்டும் பாஜக.. நீதிமன்றத்திற்கு வெளியே பரபரப்பு.. பாய்ந்த வழக்கு
சென்னை: கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பிய, கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகிக்கு எதிராக, போராட்டம் நடத்திய, பாஜகவின், கரு.நாகராஜன் உள்ளிட்ட 250 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கந்த சஷ்டி கவசம், குறித்து மலினப்படுத்தும் வகையில், வீடியோ வெளியிட்டது கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல். இதுகுறித்து தமிழகம் முழுக்க கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மேலும், பாஜக சார்பில் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், காவல்துறை நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய குற்றப் பிரிவு போலீசார் வேளச்சேரியை சேர்ந்த செந்தில் வாசன் என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சுரேந்தர் நடராஜன் (என்னும்) நாத்திகன், என்பவர் நேற்று முன்தினம் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரணடைந்தார் .

கண்டனம்
ஒருபக்கம், வீடியோ தொடர்பாக அதிமுக அமைச்சர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். திமுக அமைப்புச் செயலாளர், ஆர்.எஸ்.பாரதி இன்று அளித்த பேட்டியில், கந்த சஷ்டி கவசம் தொடர்பாக வெளியான வீடியோவை திமுக கண்டிப்பதாக குறிப்பிட்டார். இந்த நிலையில், பாஜக இதை எளிதில் விடுவதாக இல்லை என தெரிகிறது.

பாஜக தீவிரம்
ஏனெனில், சுரேந்தர் நடராஜனை, இன்று மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சென்னை அழைத்து வந்தனர். எழும்பூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுவார் என நினைத்து, பாஜக நிர்வாகிகள் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் தலைமையிலான நூற்றுக் கணக்கானோர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே குவிந்து, கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

கோர்ட் வரவில்லை
பாஜகவினர் ஒரு பக்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த தகவல் அறிந்து, அசம்பாவிதத்தை தவிர்க்க, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சுரேந்திரனை எழும்பூர் மாஜிஸ்திரேட் வீட்டிற்கு நேரில் அழைத்துச் சென்று ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பாய்ந்த வழக்கு
இதனிடையே 144 தடை உத்தரவை மீறி நீதிமன்ற வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக நிர்வாகிகள் கரு. நாகராஜன் உள்ளிட்ட 250 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் எழும்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் நீதிமன்ற பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications