போராட்டம் தொடரும்.. காலையில் கைதாகி விடுவிக்கப்பட்ட நிலையில் இடை நிலை ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு
சென்னை: கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்களை இன்று காலையில் காவல்துறையினர் கைது செய்த நிலையில், மாலையில் விடுவித்தனர். இதில் இரண்டு ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்ற நிலையில் இடை நிலை இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் செய்து வந்தனர். அவர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்புகளை வெளியிட்டார். சென்னை டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தனர். நேற்றோடு 7 வது நாளாக போராட்டம் நடந்து வந்தது. இந்த போராட்டத்தில் 3 வகையான ஆசிரியர்கள் பங்கெடுத்துள்ளனர். இவர்கள் மூன்று விதமான கோரிக்கைகளை வைத்தனர்.

டெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க கோரி தகுதி தேர்வு தேர்ச்சி ஆசிரியர்களின் கூட்டமைப்பினரும் போராடி வருகின்றனர். அதேபோல் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்களும் போராட்டம் செய்தனர். பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியர்களும் போராட்டம் செய்தனர். இவர்களிடம் அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை செய்து வந்தது.
முக்கியமாக அமைச்சர் அன்பில் மகேஷ் இவர்களுடன் பேச்சுவார்த்தை செய்து வந்தார். ஆனால் பேச்சுவார்த்தை எதுவும் பலன் அளிக்கவில்லை. தமிழ்நாடு அரசிடம் நிதி இல்லை. போதிய நிதி இல்லை. ஆசிரியர்களுக்கு கொடுக்க இவ்வளவு நிதிதான் இருக்கிறது. அந்த நிதியை வைத்தே திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அந்த நிதிக்குள் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அவ்வளவு செலவு செய்கிறோம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்தது.
அந்த நிதிக்கு ஏற்றபடி எவ்வளவு ஒதுக்கீடு செய்ய முடியுமோ அதை ஒதுக்கீடு செய்வோம் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். அதோடு நேற்று நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் பகுதி நேர ஆசிரியர்கள் 10,359 பேர் பணியில் உள்ளனர். அவர்களுக்கான ஊதியம் 12,500 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட எல்லா பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்தன.
இந்த நிலையில் சென்னையில் ஒரு வாரமாக போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டனர். போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்து, சமுக நலக்கூடங்களில் வைத்திருந்தனர். இதில் போராட்டத்தை வாபஸ் பெற்ற பகுதிநேர ஆசிரியர்கள், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சுமார் 400 பேர் மாலை விடுவிக்கப்பட்டதும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். ஆனால் இடைநிலை ஆசிரியர்களோ தங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றும் வரை போராட்டத்தை தொடருவோம் என தெரிவித்துள்ளனர்.
அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப காவல் துறையினர் திட்டமிட்டனர். ஆனால் இடைநிலை ஆசிரியர்கள் எங்களை விடுவித்தாலும், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என்று தெரிவித்தனர். இது தொடர்பாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் கூறுகையில், "இரவு 10.30 மணியளவில் டிபிஐ வளாக வாசலில் போராட்டம் தொடரும். பொதுமக்களுக்கு இடையூறு இன்றி போராட்டத்தை தொடர்வதாக" தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications