கோவில் இடிப்பு பொய்.. “மதக்கலவரத்திற்கு தூண்டுறீங்க.." பிடிஆர் கோபம்! ட்விட்டர் வதந்திக்கு வார்னிங்
சென்னை: கோயில்களை இடித்து மசூதிகள், தேவாலயங்களை எழுப்ப ரூ.12,500 கோடியை அரசு ஒதுக்கியதாக பதிவிட்ட ஃபேக் ஐடி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாரதிய ஜனதா கட்சி, மத்திய அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதன் காரணமாக பாஜகவினரும் பிடிஆரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிடிஆர் சென்ற கார் மீது மதுரை பாஜகவினர் காலணி வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடி இலவசங்களுக்கு எதிராக பேசியதை விமர்சித்து பிடிஆர் பேசியது வைரலானது.

பிடிஆர் பேச்சு
இதனை தொடர்ந்து பாஜகவினர் கடந்த சில நாட்களாக பிடிஆர் மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் தொடுத்து வருகின்றனர். ஆனால், பழனிவேல் தியாகராஜன் பல்வேறு தொலைக்காட்சிகள், ஊடகங்களில் மத்திய அரசின் பொருளாதார திட்டங்கள், இலவசங்களுக்கு எதிரான பிரதமரின் பேச்சை விமர்சித்து வருகிறார்.

சிறுபான்மையினருக்கு குரல் கொடுப்போம்
அண்மையில் ஒரு பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர் சந்திப்பில், "அரசியலை மக்களின் நண்மைக்காகவே செய்கிறோம். நீங்கள் உண்மையாகவே அரசியல் செய்கிறீர்கள் என்றால் அதை மதத்தோடு கலக்காதீர்கள். அதில் ஒரு விதிவிலக்கு கேட்டால், சிறுபான்மை மதங்களின் உரிமைகள் மற்றும் வாய்ப்புகள் பறிக்கப்படும்போது, அடக்கப்படும்போது அவர்களுக்காக போராடலாம். அது ஒடுக்கப்படும் மக்களின் மனித உரிமைக்காக குரல்கொடுப்பது.

குடும்ப ஆன்மீக பணி
இந்தியாவில் 85% - 90% பேர் இந்துக்கள். தமிழ்நாட்டில் இந்து மதத்தை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகம். இங்கு வந்து இந்துக்களுக்கு எதிரான நடக்கிறார்கள் என்று சொல்பவர் வடிகட்டிய மடையனாகவே இருப்பார். என் தாத்தா சபரிமலை ஐய்யபன் கோயிலில் சிலை வைத்தார். எத்தனையோ கோயில்களுக்கு குடமுழுக்கு செய்துள்ளார். என் தந்தையும் செய்து இருக்கிறார்.

முருகன் சிலை இருக்கா?
இங்குள்ள எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், நாராயணன், கேடி ராகவனை விட இந்துக்களுக்கும், கோயில்களுக்கும் நான் அதிகம் செய்துள்ளேன். ஆனால் நான் இறைவனை வைத்தே அரசியல் செய்ய மாட்டேன். பெரும்பான்மையாக இருக்கும் நான் யாரையும் காப்பாற்ற தேவையில்லை. நான் குல்லா போட்டுக்கொண்டுபோய் நோன்பு பிடிப்பேன். அவர்கள் உரிமைக்கு நான் பாதுகாப்பாக இருப்பேன். திடீரென இவர்கள் வந்து இந்துக்களின் பாதுகாவலர் என்கிறார்கள். எத்தனை பேர் வீட்டில் முருகன் சிலை வைத்துள்ளார்கள்.

பேக் ஐடி
இல்லாத வேல் பூஜையை செய்கிறார்கள். இது குப்பை அரசியல்." என்று காட்டமாக விமர்சித்தார். இதனை ட்விட்டரில் "ராதா இல்லாபடம் சாதா!" என்ற பாஜக ஆதரவு ஐடி ரீட்வீடு செய்திருந்தது. அத்துடன் "இவர் (பிடிஆர்) கோயில்களை இடித்து மசூதிகள், தேவாலயங்களை எழுப்ப ரூ.12,500 கோடியை 2022 - 2023 பட்ஜெட்டில் ஒதுக்கினார்." என்று குறிப்பிட்டுள்ளது.

பிடிஆர் கோபம்
இதனால் ஆத்திரமடைந்த பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில், "இது 100% தவறு. தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பரப்புகிறார்கள். இந்த ட்வீட்டை நீக்காவிட்டாமல் நாளை காலை புகாரளிக்கப்படும். நீ ஒரு கேவலமானவன், ஆனால் உன்னுடைய இழிவான மதவெறிக்கு சட்ட வரம்பு உள்ளது. இது அதைத் தாண்டிவிட்டது." என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications