பணக்கார மண்.. வளர்ந்த மாநிலம்.. இதுதான் தமிழ்நாடு! "டேட்டாவை" அடுக்கி பேசிய பிடிஆர்.. என்ன சொன்னார்?
சென்னை: தமிழ்நாடு வளர்ந்த மாநிலம், இது பணக்கார மாநிலம், இங்கே முதலீடு செய்ய பலர் தயாராக இருப்பதாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் இன்று பட்ஜெட் மீதான கேள்விகளுக்கும், விவாதங்களுக்கும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்தார்.
தமிழ்நாட்டின் நிதி நிலை, புதிய திட்டங்கள், பொருளாதார ஆலோசனை குழுவின் திட்டங்கள், மாணவியருக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பற்றி இன்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
இந்த நிலையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது உரையில், தமிழ்நாட்டில் 90 சதவிகிதம் குடும்பங்களுக்கு மேல் செல்போன் வைத்து இருக்கிறார்கள். 75 சதவிகிதம் குடும்பங்களுக்கு மேல் சொந்த வீட்டில் இருக்கிறார்கள். ஊரக பகுதிகளில் 90 சதவிகிதம் பேர் சொந்த வீட்டில் உள்ளனர். நகர்ப்புற பகுதிகளில் 60 சதவிகிதம் பேர் சொந்த வீட்டில் உள்ளனர். இதில் மொத்தம் உள்ள 75 சதவிகித பேரில் 15 சதவிகித பேர்தான் நாங்கள் அரசாங்கம் கொடுத்த வீட்டில் இருக்கிறோம் என்று கூறி உள்ளனர்.

எத்தனை பேர்
66 சதவிகித வீட்டில் இருசக்கர வாகனம் இருக்கிறது. அது கணக்கு வைத்து பார்த்தால் சரியாகத்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் 2.6 கோடிக்கும் மேல் இரண்டு சக்கர வாகனங்கள் வீடுகளில் உள்ளது. இதன் அர்த்தம் சில வீடுகளில் இரண்டு வாகனம் உள்ளது. சில வீடுகளில் இரண்டு சக்கர வாகனங்கள் இல்லை என்பதாகும். 50 சதவிகித வீடுகளுக்கு மேல் வீட்டில் பிரிட்ஜ் வைத்து உள்ளனர்.

வளர்ந்த மாநிலம்
தமிழ்நாடு வளர்ந்த மாநிலம் என்பதை இது காட்டுகிறது. ஆனால் 52 சதவிகிதம் பேர் வேலை தேடும் இடங்களில் இல்லை. அதில் பெரிய பங்கு பெண்கள். இவர்களை வேலைக்கு, தொழில் பக்கத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். தமிழ்நாட்டில் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளில் 15 சதவிகிதம், நகர்ப்புறங்களில் 10 சதவிகிதம் பேர் வயதான நிலையில் தனியாக வசிக்கிறார்கள்.

உதவிகளை செய்ய வேண்டும்
இவர்களுக்கான உதவிகளை நாம் செய்ய வேண்டும். சென்னையில் இருக்கும் முதியோருக்கு மாத வருமானமே 2200-2500 என்ற அளவில் வந்தால், கிராமங்களில் இது 1500 என்ற அளவில் வருகிறது. முதியோர் பென்சன் ஆதரவு அற்ற பலருக்கு கிடைக்காத நிலை உள்ளது. இதை எல்லாம் திருத்த வேண்டியது எங்கள் கடமை. தமிழ்நாடு நிதியை பொறுத்தவரை எங்களுக்கு சில சவால்கள் உள்ளன. சில கடுமையாக பிரச்சனைகள் உள்ளன.

ஜிஎஸ்டி எவ்வளவு?
ஜிஎஸ்டி வந்த பின் தமிழ்நாட்டின் நிதியை சரி செய்வது கடினம் ஆகியுள்ளது. எங்கள் கையில் விலங்கு போட்டது போல் கஷ்டப்பட்டு வருகிறோம். ஒன்றிய அரசு செஸ் சப் சார்ஜை அதிகரித்துள்ளனர். அங்கிருந்து வரும் பணம் நிறுத்தப்பட்டுள்ளது. அப்படியே கொடுக்கப்படும் நிதியும் அவர்களின் திட்டங்களுக்கு மட்டுமே கொடுக்கிறார்கள். இருந்தாலும் நமக்கு இருக்கும் தலையாய பிரச்சனை நிதி இல்லை. நாம் பணக்கார மாநிலம். நம்மிடம் முதலீடு செய்ய வெளிநாட்டினர் ஆர்வம் காட்டுகிறார்கள், என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications