பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மாற்றத்துக்கு அண்ணாமலை காரணமா? உண்மை என்ன தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் இன்று நடக்கும் அமைச்சரவை மாற்றத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதித்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து தகவல் தொழில்நுட்பத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முன்னதாக பிடிஆரை மாற்றம் செய்தால் அண்ணாமலை சொன்னது உண்மை என்பது போல் ஆகிவிடும் என்று சமூக வலைதளங்களில் சிலர் தங்கள் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி இருந்தனர். ஆனால் உண்மையில் பிடிஆரை மாற்ற வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பே ஸ்டாலின் முடிவு செய்திருந்தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்று தமிழகத்தின் புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா பொறுப்பேற்றார். அவருக்கு தொழில்துறை ஒதுக்கப்பட்டது. தங்கம் தென்னரசு நிதி மற்றும் மனித வளத்துறைக்கு அமைச்சரானார். டிஆர்பி ராஜா தொழில்துறை அமைச்சரானார். மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராகவும் மாறி உள்ளார்.
தர்மசங்கடம்: முன்னதாக மற்ற அமைச்சர்களின் மாற்றங்களைவிட பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மாற்றப்பட போகிறார் என்கிற தகவல் அவரது ஆதரவாளர்களை கவலையடைய வைத்தது. ஏனெனில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி மற்றும் அவரது மருமகன் சபரீசன் ஆகியோர் குறித்து பேசியதாக பரவிய ஆடியோக்கள் திமுகவிற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
ஆடியோ போலி: ஆனால் இந்த ஆடியோ போலியானது என்றும், ஏஐ உதவியுடன் இந்த ஆடியோக்களை உருவாக்கியதாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வீடியோ மூலம் விளக்கம் அளித்தார். முதல்வர் ஸ்டாலினும் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டார். உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பிடிஆர் ஆதரவாளர்கள்: இந்த சூழலில் திடீரென பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அமைச்சரவையில் இருந்து மாற்றப்பட உள்ளதாக வெளியான செய்தி, பிடிஆரின் ஆதரவாளரகளை கவலை அடைய வைத்துள்ளது. அண்ணாமலை சொன்னது பொய் என்று கூறும் அவர்கள், ஒருவேளை அமைச்சரவையில் இருந்து நிர்வாக காரணங்களுக்காக பிடிஆரை மாற்றினாலும், அதைவைத்தும் அரசியல் செய்வார்கள் என்றும், அவர்களுக்கு இந்த மாற்றம் பேசுபொருளாகும் என்றும் பிடிஆர் ஆதரவாளர்கள் டுவிட்டரில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

கவலை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜகவினர் தாங்கள் வெளியிட்ட ஆடியோவால் தான் பிடிஆர் மாற்றப்பட்டதாக கூறக்கூடும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்திருந்தனர். ஆனால் உணமையில் பிடிஆர் மாற்றத்திற்கு இப்போது ஸ்டாலின் திட்டமிடவில்லை என்றும், சில மாதங்களுக்கு முன்பே அமைச்சரவையை மாற்ற ஸ்டாலின் திட்டமிட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த அமைச்சரவை மாற்றத்திற்கும் , அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்கிறார்கள் திமுகவினர். ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் கடந்து 3 வது ஆண்டை எட்டியுள்ள நிலையில், அவர்களின் செயல்பாடுகள் அடிப்படையிலும், புது உத்வேகம் அளிக்க வேண்டும் என்பதற்காவும் இந்த மாற்றம் நடந்ததாக கூறப்படுகிறது. டிஆர்பி ராஜாவை அமைச்சராக்குவது குறித்து நீண்ட நாளாக பரிசீலனை செய்யப்பட்டு வந்தநிலையில் இதுஇப்போது நடந்திருப்பதாகவும் சொல்கிறார்கள் திமுகவினர்.












Click it and Unblock the Notifications