அன்று முதல்வர் பேசினார்.. இன்று கடிவாளம்.. சமூக வலைத்தள கண்காணிப்பு: பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை: சமூக ஊடகங்களில் குற்றச்செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களில் செய்யப்படும் தவறான பரப்புரைகளின் விளைவாக அதிகரிக்கும் குற்றச்செயல்களை தடுத்திட சமூக ஊடக சிறப்பு மையம் காவல்துறையில் அமைக்கப்படும் என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2022- 2023 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசுகையில், வரலாறு காணாத வேகத்தில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பதவியேற்ற முதல் நாளிலேயே 5 தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றினார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
மீதமுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒரு தொலைநோக்கு திட்டத்தை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த வெற்றி முதலமைச்சரின் செயல்பாட்டுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. மாநில அரசின் உரிமைகளுக்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடும்.

வருவாய் பற்றாக்குறை
தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை இம்முறை ரூ 7000 கோடி குறைய உள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறைகிறது. ஒன்றிய அரசின் வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத்தொகையால் ₹20,000 கோடி இழப்பு ஏற்படும். தமிழ் மொழி குறித்த ஆய்வுக்காக ₹2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ் வழி கல்வி
அரசின் உதவி பெறாத தமிழ் வழியில் கற்பிக்கும் பள்ளிகளுக்கு ₹15 கோடி செலவில் பாட புத்தகங்கள் வழங்கப்படும். தமிழக பட்ஜெட் தாக்கல் 2022 : பெரியாரின் சிந்தனைகளை 21 மொழிகளில் பதிப்பிட 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வெள்ள தடுப்பு பணிகளுக்காக 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்கள்
சட்டம் ஒழுங்கை திறம்பட நிலைநாட்டுவதன் வாயிலாக தமிழகம் ஓர் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் , போதை பொருட்களின் பயன்பாடு ஆகியவற்றைத் தடுப்பதற்கு இந்த அரசு தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றன. வளர்ந்து வரும் புறநகர்ப்பகுதிகளில் காவல் துறை திறம்படச் செயலாற்றிட சென்னை காவல் ஆணையரகம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ஆவடியிலும் தாம்பரத்திலும் இரண்டு புதிய ஆணையரகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மேலும் இத்துறைக்குத் தேவைப்படும் அனைத்து கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்படும். இந்த வகையில் சமூக ஊடகங்களில் செய்யப்படும் தவறான பிரச்சாரங்களின் விளைவாக அதிகரித்து வரும் குற்றச் செயல்களைத் தடுத்திட சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும் என்றார்.

முதல்வர் அன்று பேசினார்
அண்மையில் மாவட்ட ஆட்சியர்கள்- காவல் துறை எஸ்பியுடனான மீட்டிங்கில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் தமிழகத்தில் எப்போது சட்டம், ஒழுங்கு சீராக இருப்பதை மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு விஷயத்திலே நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். அதை நீங்கள் அனைவரும் உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள் குற்றங்கள், பொருளாதாரக் குற்றங்களை இந்த அரசு ஒரு போதும் அனுமதிக்காது. மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கக் கூடிய வகையில் யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சமுதாயத்தில் அமைதி நிலவுவதை உறுதி செய்யக் கூடிய வகையில் சாதி மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் மிகுந்த கவனத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் காவல் துறை ஈடுபட்டு வருகிறது. நாசகார சக்திகள் எந்த வடிவிலும் தலைதூக்க நாம் அனுமதித்துவிடக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications