பேருதான் கலைஞர் மருத்துவமனை.. ஆனா டாக்டரே இல்லை! உயிரிழந்த இளைஞரின் உறவினர் குற்றச்சாட்டு
சென்னை: வயிற்று வலிக்கு சிகிச்சை பெற கிண்டி கலைஞர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் சென்னையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்புக்கு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததே காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த 31 வயதான இளைஞர் விக்னேஷ் கடந்த 13ம் தேதி, கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு பித்தப்பையில் கல் இருப்பதாகவும், நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட விக்னேஷ், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததே உயிரிழப்புக்கு காரணம் என விக்னேஷின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஏற்கெனவே தனது தாய்க்கு சரியாக மருத்துவம் பார்க்காததால், ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் இதே மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை கத்தியால் குத்தியிருந்தார். இந்நிலையில், போதிய மருத்துவர்கள் இல்லாததால் இளைஞர் உயிரிழந்ததாக கூறி மற்றொரு குடும்பத்தினர் மறியலில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர் விக்னேஷ் உயிரிழந்தது குறித்து உறவினர்கள் கூறுகையில், “நாங்கள் கடந்த 13ம் தேதி விக்னேஷை இங்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தோம். பித்தப்பையில் கல் இருப்பதால் சிகிச்சை அளிக்க கேட்டுக்கொண்டிருந்தோம். விக்னேஷை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அட்மிட் ஆக சொன்னார்கள். நாங்களும் அனுமதித்தோம். விக்னேஷை எமெர்ஜென்சி வார்டுக்கு அழைத்து சென்றார்கள். ஆனால் போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. ஒரேயொரு ஊசி மட்டும் போட்டார்கள். பின்னர் சாதாரண வார்டுக்கு மாற்றிவிட்டார்கள்.
அப்போது தொடங்கி நேற்று இரவு வரை எந்த சிகிச்சையும் அவருக்கு அளிக்கப்படவில்லை. இரத்த அழுத்தம், சுவாசம் எந்த அளவுக்கு இருக்கிறது என எந்த பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை. இறுதியாக நேற்றிரவு விக்னேஷுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து அவர் மீண்டும் எமெர்ஜென்சி வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு செயற்கை சுவாசம் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில் திடீரென அவர் உயிரிழந்துவிட்டார்.
நாங்கள் இங்கு அவரை சிகிச்சைக்காக அழைத்து வரும்போதே போதிய மருத்துவர்கள் இல்லை, சிகிச்சை அளிக்க முடியாது என்று சொல்லியிருந்தால் வேறு மருத்துவமனையில் அனுமதித்திருப்போமே. ஆனால் அப்படி எதையும் சொல்லாமல் இப்போது ஒரு உயிரை கொன்றிருக்கிறார்கள். மருத்துவமனைக்கு கலைஞரின் பெயரை வைத்துக்கொண்டு இப்படி செய்வது நியாயமா? உயிரிழந்த விக்னேஷுக்கு 2 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. அக்குழந்தைக்கும், அவரது மனைவிக்கும் யார் பதில் சொல்வது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏற்கெனவே கிண்டி மருத்துவமனையில் நடந்த கத்தி குத்து சம்பவத்தின்போது, சம்பவம் குறித்து விளக்கமளித்த சமூக மாற்றத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தினர், மருத்துவமனையில் மருத்துவர்கள் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என வலியுறுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications