இழுத்துகிட்டு கிடந்தாலும் நகை லோன் கிடையாது..RBI தந்த ஷாக்..நல்லது என்ற நா.திருப்பதி! வலுத்த கண்டனம்
சென்னை: தங்க நகை கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் நிலையில் அதனை ரத்து செய்ய வேண்டும் என வாடிக்கையாளர்கள் கூறி வருகின்றனர். அவசர தேவைக்கு கூட நகைக்கடன் பெற முடியாத சூழல் எந்த கட்டுப்பாடுகளால் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த முடிவை, திரும்பப் பெற வேண்டுமென பொதுமக்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை தங்கம் குறிப்பிட்ட சதவீத மக்களால் முதலீடாக பார்க்கப்பட்டாலும் பெரும்பான்மையான அவசர தேவைக்கு உதவும் பொருளாக தான் பார்க்கிறார்கள். ஒரு கிராம் தங்கம் இருந்தால் கூட உடனடியாக அவற்றை அடகு கடைகளிலோ வங்கிகளிலோ வைத்து பணமாக மாற்றி விட முடியும்.
இந்த நிலையில் வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கு நகை கடன் வழங்குவது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்திருக்கிறது. 75 சதவீதம் தான் கடனாக வழங்க வேண்டும், தங்க காசுகளை அழகு பிடிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட ஒன்பது கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது.

இது நகைக்கடன் பெறுவோரை வெகுவாக பாதிக்கும் எனவும் ரிசர்வ் வங்கியின் இந்த கட்டுப்பாடு பொதுமக்களை கடும் இன்னலுக்கு ஆளாக்கும் என்பதால் அதனை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கியில் கட்டுப்பாடுகள் நல்லது தான் எனவும், இதனால் வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் எனக் கூறி இருக்கிறார் தமிழக பாஜக துணை தலைவர் ஆன நாராயணன் திருப்பதி.
ஆனால் அவரது இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த பதிவில்,"தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு நகை கடன் ஒரு வருடத்திற்கு பெறப்பட்டிருந்தால், வட்டியை ஒரு வருட நிறைவுக்கு முன்னர் செலுத்தியிருந்தால், கடனை புதுப்பித்து கொள்ளலாம். 'நிலையான கணக்குகளுக்கு (Standard Account) இது பொருந்தாது. அதாவது 10000 ரூபாய் கடன் பெற்றவர்கள் வங்கியுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி வட்டியை செலுத்தியிருக்க வேண்டும். அப்படி செலுத்தாதவர்கள் அசலையும் சேர்த்து செலுத்திய பின்னரே புதிதாக கடன் பெற முடியும். இப்படி செய்வது கடன் அழுத்தத்தை குறைப்பதோடு, நகைகள் ஏலம் போகாது தடுக்கும்" என கூறி இருந்தார்.
இந்த நிலையில் நாராயணன் திருப்பதியின் பதிவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் தங்க நகை கடன் அளவு மிக அதிகம் எனவும், நகைக் கடன் மீதான தாக்குதல் தமிழர்கள் மீதான சர்ஜிகல் ஸ்ட்ரைக் எனவும் ஒன்றிய பாஜகவுக்கு தமிழர்கள் மீது எவ்வளவு வன்மம் என கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் கருப்பு பண ஒழிப்பு தொடர்பாக நாராயணன் திருப்பதி பேசியிருக்கும் நிலையில் இதே போல் தான் 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்றும், அதற்கு முன்பு ஆயிரம் ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற போதும் பாஜகவினர் முட்டுக் கொடுத்தனர். இப்போது எவ்வளவு கருப்பு பணத்தை ஒழிச்சிங்க என மற்றொரு பதிவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் நாராயணன் பதிவுக்கு ஒட்டுமொத்தமாகவே சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.












Click it and Unblock the Notifications