தமிழக அரசின் தரமான செயல்! மனதார வாழ்த்தும் மக்கள்! ஸ்பெஷல் பஸ்களில் 'நோ ஸ்டாண்டிங் ஆல் சிட்டிங்'!
சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் 16,888 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டதால் மக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்தாண்டு முன்னேற்பாடுகளை முறையாக செய்திருந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கும், தமிழக அரசுக்கும் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.
இதனிடையே தீபாவளி விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து பணிபுரியும் ஊர்களுக்கு மக்கள் செல்வதற்கு வசதியாக 6,000க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் அடுத்த 3 நாட்களுக்கு இயக்கப்படவுள்ளன.

தீபாவளி பண்டிகை
சென்னையில் இருந்து 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தீபாவளியை பண்டிகையை கொண்டாடுவதற்காக கடந்த 4 நாட்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையம் தொடங்கி பெருங்களத்தூர் வரை மக்கள் கூட்டம் அலைமோதியது. ஊருக்கு போக பேருந்துகளில் இடம் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற ஊசலாட்டத்துடன் பேருந்து நிலையங்க்ளுக்கு வந்த மக்களுக்கு அங்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது என்றே கூறலாம்.

முன் திட்டமிடல்
ஆம், கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் இந்தாண்டு முறைப்படி முன் திடமிடலுடன் அதிக எண்ணிக்கையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டதால் மக்கள் நிம்மதியாக பயணிக்க முடிந்தது. ஜன்னல் வழியாக கர்சீப்பை வீசி இடம்பிடிக்க தேவையின்றி, பொறுமையாக எல்லோருக்கும் இடம் கிடைக்கும் வகையில் பேருந்துகள் வரிசைக் கட்டி நின்றன. இதனால் சீட் பிடிப்பதில் சண்டை சச்சரவின்றி மகிழ்ச்சியுடன் சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணித்திருக்கிறர்கள்.

அமைச்சர் சிவசங்கர்
இதனிடையே போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கும், தமிழக அரசுக்கும் பாராட்டு தெரிவித்துள்ள பலரும், தீபாவளிக்கு முன்னர் சிறப்பு பேருந்துகளை அதிகளவில் இயக்கியது போல், தீபாவளி முடிந்த பின்னரும் நிறைய எண்ணிக்கையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறியிருக்கிறார்கள். அதேபோல் எந்தப் பேருந்திலும் யாரும் நின்று கொண்டு பயணிக்க வேண்டிய அவலம் இல்லை எனவும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலரும் பெருமிதம் தெரிவித்திருக்கிறார்கள்.

முதல்வர் ஆலோசனை
தீபாவளிக்கு கூடுதல் சிறப்புப் பேருந்துகளை இயக்கும் விவகாரத்தில் ஒரு மாதத்துக்கு முன்பே முதலமைச்சர் ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்தியதோடு, போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளையும் வழங்கினார். அமைச்சர், அதிகாரிகள், ஊழியர்கள் என போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பால் மக்கள் முகத்தில் மகிழ்ச்சியை காண முடிந்தது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications