கொரோனா சிகிச்சை முடிந்து.. வீடு திரும்பினார் புதுவை முதல்வர் ரங்கசாமி
சென்னை: கொரோனா தொற்று காரணமாகச் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பூரண குணமடைந்து இன்று மீண்டும் புதுச்சேரி திரும்பினார்.
புதுச்சேரி முதலமைச்சராக என்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி கடந்த 7ஆம் தேதி பதவி ஏற்றார். பதவியேற்ற மறுதினம் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டதன் காரணமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் ரங்கசாமிக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 9ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவக் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தது. இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்த ரங்கசாமி இன்று தனியார் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இன்று மாலை அவர் புதுச்சேரி வந்தடைந்தார், ரங்கசாமியின் வருகையையொட்டி என் ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் மாநில எல்லையில் தேங்காய் உடைத்தும், ஆரத்தி எடுத்தும் அவரை வரவேற்றனர்.
மருத்துவமனையிலிருந்து நேராக திலாஸ்பெட் அப்பா பைத்தியம் சாமி கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்த ரங்கசாமி, அதன் பிறகே வீட்டுக்குச் சென்றார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி முதலமைச்சர் ரங்கசாமி தற்போது தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.












Click it and Unblock the Notifications