அமைச்சர் உதயநிதி.. தமிழிசை “ஓவரா” பேசுறாரு! பாஜகவை “குஷி”படுத்தும் ஆட்சி - கொந்தளித்த மாஜி நாஜிம்
சென்னை: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் எல்லை தாண்டி பேசி வருகிறார் எனவும், காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரிக்கு உட்பட காரைக்காலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசிடமிருந்து அனுமதி பெறுவதில் காலதாமதம் செய்யப்படுவதாக, புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி விமர்சித்திருப்பது மிகவும் தாமதமான செயல்.
இதைத்தான் நாங்கள் முன்பிருந்தே சொல்லி வருகிறோம். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சியாக இருந்தால் வளர்ச்சி இருக்கும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னதை நம்பி ஏமாந்து மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் அதற்குரிய பலன் எதுவுமில்லை. அதைத்தான் முதல்வர் சொல்லியுள்ளார்.

தமிழிசை சவுந்திரராஜன் எல்லை மீறல்
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கியது குறித்து துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. அவர் தனது எல்லையை தாண்டி பேசி வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவரின் அத்துமீறிய சில செயல்பாடுகள் ஏற்புடையதல்ல. இது போன்ற செயல்பாடுகளை அவர் குறைத்துக்கொள்ள வேண்டும்.

பாஜகவை குஷிபடுத்தும் ஆட்சி
தொகுதி எம்.எல்.ஏ.க்கள், மக்கள் இல்லாமல் திருநள்ளாறு ஆன்மிகப் பூங்கா திறக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. புதுச்சேரியில் நடப்பது மக்களுக்கான ஆட்சி அல்ல. மத்தியில் ஆள்வோரை குஷிப்படுத்தும் ஆட்சியாக உள்ளது. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி நீடிப்பது மக்களுக்கு ஆபத்து.தனி மாநில அந்தஸ்து கொள்கையை முன் வைத்துதான் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

மாநில அந்தஸ்து
அந்த கோரிக்கையை நிறைவேற்ற அனைத்துக் கட்சியினருடன் பேசி, மத்திய அரசை அணுகி நடவடிக்கை எடுக்க வேண்டிய உகந்த தருணம் இதுதான். ஆனால் முதல்வர் அதை ஏன் செய்யவில்லை? ஒருங்கிணைந்த புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவசப் பேருந்து முழுமையாக இயக்கப்படவில்லை." என்றார்.

தமிழிசை பேட்டி
புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், "புதுச்சேரியில் நல்ல ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது புதுச்சேரிக்கு திராவிட மாடல் ஆட்சி தேவையில்லை. தமிழ்நாடு அரசு புதுச்சேரியில் விமான நிலையத்தை அமைக்க 300 ஏக்கர் நிலத்தை கொடுக்கட்டும். இங்கு திராவிட மாடல் ஆட்சி இல்லை.

ஸ்டாலினிடம் கோரிக்கை
மு.க.ஸ்டாலினிடம் நான் ஏற்கனவே நேரிலும், தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டிலும் சந்தித்து விமான நிலையத்தின் விரிவாக்க பணிக்காக இடம் கேட்டு உள்ளேன். அவருக்கு உண்மையாகவே புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு மக்கள் மீது அக்கறை இருந்தால் புதுச்சேரி மாநிலத்திற்கு என்ன வேண்டுமோ அதை செய்யட்டும்.

ஆளுநரின் தலையீடா?
துணை நிலை ஆளுநர் என்ற அடிப்படையில் புதுச்சேரி அரசுக்கு துணையாகவே நான் இருந்து வருகிறேன். ஆளுநரின் தலையீடு என்று சொல்லி வருகிறார்கள். பலருது தலையீடு உள்ள தமிழ்நாடு அரசை விட ஆளுநரின் தலையீடு எதுவும் பெரிதல்ல. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரிக்கு வந்தபோது ஆற்றிய உரையில் பேசிய எதுவுமே சரியில்லை." என்றார்.

உதயநிதி பதவியேற்பு பற்றி விமர்சனம்
அப்போது தமிழிசை சவுந்திரராஜனிடம், உதயநிதி ஸ்டாலின்தமிழ்நாடு அமைச்சராக பதவியேற்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தமிழிசை, "இதுதான் புதிய மாடலோ. நாங்கள் 25 ஆண்டுகள் கஷ்டப்பட்டு உழைத்து வாரிசு இல்லாமல் இந்த நிலைக்கு வந்து இருக்கிறோம்." என விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications