புதுவை 'சரக்கு' எவ்வளவு எடுத்து வரலாம்? 4.5 லிட்டர் அனுமதின்னு நினைச்சி மாட்டிக்காதீங்க! எச்சரித்த போலீஸ்!
சென்னை: புதுவையில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் எவ்வளவு மதுபானம் கொண்டு வரலாம் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. நேற்று வழக்கு ஒன்றில், தனிநபர் ஒருவர் 4½ லிட்டர் மது வைத்துக்கொள்ளலாம் என்று விதி இருக்கின்றது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த நிலையில், புதுவையில் இருந்து 90 ml மதுபானம் கொண்டு வந்தாலே நடவடிக்கை பாயும் என கடலூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கூறுகையில், சமீபத்திய உயர் நீதிமன்ற உத்தரவில் சுட்டிக் காட்டப்பட்ட அரசாணை திருத்தப்பட்டுவிட்டது. எனவே சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

1680 மில்லி லிட்டர் மது பாட்டில்
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து புதுவை செல்லும் மதுபிரியர்கள் சிலர் அங்கு மதுபானம் தமிழகத்தை விட சற்று குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் அங்கிருந்து வாங்கிக்கொண்டு தமிழகம் வருகின்றனர். இவ்வாறு மதுபானங்கள் கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் புதுச்சேரியில் இருந்து 1680 மில்லி லிட்டர் மது பாட்டில்களை தமிழகத்திற்கு கொண்டு செல்ல முயன்ற வல்லரசு என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதாவது, புதுவையில் இருந்து கடலூருக்கு வல்லரசு என்ற நபர் ஒருவர் 750 மில்லி லிட்டர் அளவு கொண்ட ஒரு மதுபாட்டிலும், 'ஓல்டு மங்க்' என அழைக்கப்படும் 180 மில்லி லிட்டர் அளவுகொண்ட இரண்டு மதுபாட்டிலும் எடுத்து வந்துள்ளார். அளவுக்கு அதிகமாக கொண்டு வந்ததாக கூறி வாகன சோதனையின் போது மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
இது தொடர்பாக வல்லரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது வல்லரசு தரப்பில், "சொந்த பயன்பாட்டுக்காக ஒருவர் 4.5 லிட்டர் மது வைத்துக் கொள்ளலாம் என்று கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருக்கிறது. ஆனால், மனுதாரர் 1680 மில்லி லிட்டர் மதுபானம் மட்டுமே அவரது வாகனத்தில் வைத்து இருந்தார். எனவே, மனுதாரர் மீது எந்த குற்றச்சாட்டும் கூற முடியாது. வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என்று வாதிட்டார்.
அப்போது தீர்ப்பு கூறிய நீதிபதி, "இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களை 4.5 லிட்டர் வரை சொந்த பயன்பாட்டுக்காக வைத்துக்கொள்ள முடியும் என என்று விதி இருக்கிறது. மனுதாரரிடம் கைப்பற்றப்பட்ட மதுபானத்தின் அளவு 1 லிட்டர் 680 மில்லிலிட்டர்தான். எனவே, மனுதாரர் மீது வழக்கை தொடர முடியாது. அந்த வழக்கை ரத்து செய்கிறேன்" என்று உத்தரவு பிறப்பித்தார்.
கடலூர் போலீசார் மேல்முறையீடு
சென்னை உயர் நீதிமன்றம் இவ்வாறு கூறிய நிலையில், கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் இதனை மறுத்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்துள்ளனர். போலீசார் கூறுகையில், "சமீபத்திய உயர் நீதிமன்ற உத்தரவில் சுட்டிக் காட்டப்பட்ட அரசாணை திருத்தப்பட்டுவிட்டது. எனவே சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications