13ம் தேதி இரவு நடந்த ரகசிய மீட்டிங்.. இனிதான் ஆட்டமே.. புட்டு புட்டு வைத்த புகழேந்தி.. என்ன பின்னணி?
சென்னை: சட்டசபை எதிர்கட்சித் துணை தலைவர் பதவியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி இது குறித்து மௌனம் கலைத்துள்ளார். அதிமுக கட்சி மீட்டிங்கிற்கு முதல்நாள் இரவு என்ன நடந்தது என்று விளக்கி இருக்கிறார்.
கடந்த 14ம் தேதி நடந்த அதிமுக கட்சி கூட்டத்தில், சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை ஏற்பதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். கட்சிக்குள் நிறைய உட்கட்சி பூசல் நிலவி வந்த நிலையில், திடீரென ஓபிஎஸ் எடுத்த இந்த முடிவு பெரிய திருப்பமாக பார்க்கப்பட்டது.
அதோடு சசிகலாவுடன் நெருக்கமாக இருந்தவர்கள் பலர் கட்சியில் நீக்கப்பட்டுள்ளனர். அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய 15 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
ஒன்றிய அரசு என்று கூறியதால்தான்.. டிஸ்மிஸ் ஆனாரா பெங்களூரு புகழேந்தி? பாஜகவை கூலாக்க அதிமுக ஆக்ஷனா?
எப்படி
இந்த நிலையில் திடீரென ஓபிஎஸ் இறங்கி வந்தது ஏன்? சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டது ஏன் என்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி பேட்டி அளித்துள்ளார். அதில், ஜெயலலிதாவிற்கு நெருக்கமாக இருந்த, பல ஆண்டுகள் அவரின் மதிப்பிற்கு உரியவனாக விளங்கிய என்னை எடப்பாடி என்னும் சர்வாதிகாரி நீக்கி இருக்கிறார். அவருக்கு அகம்பாவம் அதிகரித்துவிட்டது.
வெற்றி
அதிமுக என்னமோ அவரால்தான் வெற்றிபெற்றது போல எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டு இருக்கிறார். கொடுரமான நபர் போல எடப்பாடி பழனிசாமி செயல்பாட்டுக்கு கொண்டு இருக்கிறார். ப்யூன் வேலைக்கு கூட லாயக்கு அற்றவர்தான் எடப்பாடி பழனிசாமி. உங்களை கேள்வி கேட்டாலே அது தவறா? என்னை பழி வாங்கி உள்ளனர். அதிமுகவில் எல்லா நிர்வாகிகளும் இதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
பாதை
கட்சி செல்லும் பாதையை அவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். ஒரு நல்ல அரசியல் எதிரியை நீங்கள் தேர்வு செய்து விட்டீர்கள்.. உங்களை எங்கே நிறுத்த வேண்டுமோ அங்கே நிறுத்துவேன். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் பாருங்கள். என்ன நடக்கிறது என்று. எடப்பாடி பழனிசாமி சீக்கிரமே உள்ளே இருந்து பேசுவார். உங்களின் உண்மை முகத்தை தோலுரிப்பேன். இனிதான் ஆட்டமே இருக்கிறது.
பல விஷயம்
பல விஷயங்கள் நடக்க போகிறது. எடப்பாடி பழனிசாமி இனி தப்பிக்க முடியாது. கட்சியில் சர்வாதிகாரம் இருப்பதால்தான் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக பேசியும் கூட எங்களை நீக்கி உள்ளனர். ஓபிஎஸ் பற்றி நான் தவறாக பேச மாட்டேன். எடப்பாடி பழனிச்சாமி சர்வாதிகாரி போல செயல்படுகிறார். சர்வாதிகாரியின் முடிவிற்கு ஓபிஎஸ் கட்டுப்பட தொடங்கி விட்டார்.
மீட்டிங்
இது தொடர்பாக மீட்டிங்கிற்கு முதல் நாள் (13ம் தேதி) இரவே, துணை எதிர்கட்சித் தலைவர் பதவியை ஏற்க வேண்டாம் என்று நாங்கள் ஓபிஎஸ்ஸிடம் கூறினோம். அன்று இரவே நாங்களும், எங்கள் ஆதரவாளர்களும், அவரின் ஆதரவாளர்களும் ஒன்றாக சென்று அவருடன் மீட்டிங் நடத்தினோம். ஆனால் ஓபிஎஸ் மறுநாளே எதிர்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார். ஓபிஎஸ் ஏன் இப்படி செய்தார் என்று தெரியவில்லை. எங்களுக்கு எதுவும் புரியவில்லை. "கவலைப்படாதீர்கள்.. இப்படி ஆகிவிட்டது" என்று ஓபிஎஸ் எங்களிடம் ஆறுதல் கூறினார்.
இனி
கட்சியை இனி மீட்க வேண்டியது இல்லை, கட்சியை கைப்பற்ற வேண்டும். எனக்கு தினமும் 1000 கணக்கில் தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. சசிகலா தயவில் முதல்வர் ஆனவர் நான் இல்லை, எடப்பாடி பழனிச்சாமிதான். சின்ன கட்சிகள் எல்லாம் அசிங்கப்படுத்தும் அளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டது. வலிமையான தலைமை இருந்திருந்தால் இப்படி நடந்து இருக்காது.