அதிமுக உரிமை வழக்கு! எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக புகழேந்தி புதிய வழக்கு! இன்று விசாரணை
சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரத்தைத் தேர்தல் ஆணையம் விசாரிக்கக் கூடாது என்ற உயர்நீதிமன்றத்தின் தடை ஆணையை நீக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வா.புகழேந்தி தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்டு இன்று விசாரணைக்கு வருகிறது.
அதிமுக குறித்து நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளில் தீர்வு காணும் வரை இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் ஒதுக்கக் கூடாது என சூரியமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த விவகாரத்தில் 4 வாரத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹைகோர்ட் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், இரட்டை இலை சின்னம் சம்பந்தமாக வழக்கு தொடர்ந்த கே.சி.பழனிசாமி, புகழேந்தி, ரவீந்திரநாத், ராம்குமார் ஆதித்தன், சூரியமூர்த்தி உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கை எடப்பாடி தாக்கல் செய்தார். அதாவது அதிமுக சின்னம் குறித்து வழக்கு போட்ட சூரியமூர்த்தி அதிமுக உறுப்பினரே கிடையாது. அப்படியிருக்கையில் அவர் எப்படி அதிமுக குறித்து வழக்கை தொடர முடியும்? அவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கவும் முடியாது.
இவர் கோரியுள்ள நிவாரணங்கள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டவை கிடையாது. எனவே சூரியமூர்த்தியின் மனுவை நிராகரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு ஜனவரி 9-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இரட்டை இலை சின்னம், அதிமுக பொதுச் செயலாளர் பதவி தொடர்பாக உரிமையியல் வழக்குகள் ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, தேர்தல் ஆணையம் எந்த விசாரணையும் நடத்தக் கூடாது என்று விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதிகள், இதுகுறித்து வரும் 27ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த வா.புகழேந்தி, ஜனவரி 10 சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டு நீதிபதிகள் சுப்பிரமணியன், குமரப்பன் ஆகியோர் அமர்வு முன்பு இன்று வருகிறது.












Click it and Unblock the Notifications