ஆண்டுக்கு ரூ.20 லட்சம் லாபம்! காளான் வளர்ப்பில் அசத்துவது எப்படி? தமிழகத்தில் என்னென்ன வாய்ப்புகள்?
சென்னை: பஞ்சாப்பை சேர்ந்த ஒருவர் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு ஆண்டுக்கு ரூ.18 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை லாபம் ஈட்டி வருகிறார். தொழில் செய்ய நினைக்கும் நபர்கள் மிகமிக குறைந்த முதலீட்டில் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு அதிக லாபம் ஈட்ட முடியும். தமிழகத்தில் இது சாத்தியமா? அரசு திட்டங்கள் என்ன? என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போதைய சூழலில் பெரும்பலானவர்கள் சுயதொழில் துவங்கி முன்னேற்றம் காண துடித்து வருகின்றனர். இருப்பினும் கூட சுயதொழிலுக்கான முதலீடு இன்றியும், முதலீடு செய்தும் கூட நஷ்டப்பட்டு சிக்கலில் சிலரும் மாட்டி கொள்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் தான் மிகமிக குறைந்த முதலீட்டில் ஒருவர் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு ஆண்டுதோறும் ரூ.18 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை லாபம் ஈட்டி வருகிறார். இது தற்போது பலருக்கும் ஊக்கமளித்துள்ளது. அவர் சாதித்தது எப்படி? என்பது பற்றிய விபரம் வருமாறு:
ஓலைப்பாயில் சம்மணம் போட்டு அமர்ந்து காளான் பிரியாணியை ஒரு கை பார்த்த ராகுல்காந்தி
காளான் வளர்க்கும் பஞ்சாப் நபர்
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் பகுதியை சேர்ந்தவர் யஷ்பால். விவசாயத்தில் ஆர்வம் கொண்ட இவர் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்ட முடிவு செய்தார். இதுபற்றி சிந்தித்த வேளையில் மூளையில் தோன்றிய விஷயம் தான் இந்த காளான் வளர்ப்பு. காளான் வளர்ப்பில் பெரும்பாலும் விவசாயிகள் ஆர்வம் காட்டாதது மற்றும் கொஞ்சம் வித்தியாசமான தொழில் என்பதால் யஷ்பால் காளான் வளர்ப்பில் இறங்கினார்.
தரமான காளான்கள் உற்பத்தி
முதற்கட்டமாக காளான் வளர்ப்பு பற்றிய விபரங்களை அவர் நன்கு அறிந்து கொண்டார். அதன்பிறகு காளான் வளர்ப்பில் ஈடுபட்டார். காளான் வளர்ப்பில் முக்கியமானது என்னவென்றால் சூரியஒளி புகாத இடத்தை அமைப்பது தான். சூரியஒளி படாத இடத்தில் இருட்டான செட்அப்பில் தான் காளான்கள் நன்கு வளரும். இதனால் சூரியஒளி நுழையாத இடத்தை தேர்வு செய்து காளான் வளர்ப்பை துவங்க வேண்டும். மேலும் காளான் வளர்ப்பு இடத்தை சுத்தமாக வைத்து கொண்டால் போதும். நன்கு தரமான காளான்களை வளர்த்து அறுவடை செய்ய முடியும்.
வீட்டில் வளர்ப்பது எப்படி?
நாமும் நமது வீட்டு அறை, மாடியில் அல்லது வீட்டு அருகே உள்ள சிறிய இடத்தில் மிகவும் குறைந்த முதலீட்டில் காளான் வளர்ப்பை தொடங்க முடியும். குறைந்தபட்சமாக 6 அடி நீளம், 6 அடி அகலம் கொண்ட இடம் கூட இருந்தால் போதும். அதனை சூரியஒளி படாத இடமாக மாற்றி கொள்ள வேண்டும். அதன்பிறகு தண்ணீரில் நன்கு ஊறவைத்த வைக்கோலை பாலித்தீன் கவரில் வைத்து கொண்டு காளான் விதைகளை அதில் போட வேண்டும். பாலித்தீன் கவரில் தொடர் அடுக்குகளாக இதனை செய்ய வேண்டும். அதன்பிறகு பாலத்தீன் கவரில் ஆங்காங்கே துளைகள் மட்டும் போட்டு அப்படியே 20 நாட்கள் வைத்து விட வேண்டும். அதன்பிறகு தண்ணீர் மட்டும் தெளித்தால் போதும் 23 முதல் 25வது நாளுக்குள் காளான் முளைக்க துவங்கும். ஒரு பாலத்தீன் கவரில் இருந்து ஒன்றரை கிலோ அளவுக்கு காளான் கிடைக்கும். ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனையாகும் என்பதால் நல்ல லாபம் கிடைப்பது என்பது உறுதியாகும்.
சிப்பி-பால் காளான் விவசாயம்
பொதுவாக காளான் சாகுபடிக்கு ஏற்ற காலம் என்பது குளிர்காலம். ஆனால் இந்த வகை சாகுபடியை நாம் எந்த காலத்திலும் மேற்கொள்ள முடியும். இந்த தொழிலில் ஈடுபடுவதன் மூலம் ஆண்டு முழுவதும் நல்ல லாபம் ஈட்டலாம். தற்போது இந்தியாவில் பல பேர் சிப்பி மற்றும் பால் காளான் உற்பத்தி செய்து நல்ல லாபம் பெற்று வருகின்றனர். புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் சாகுபடியும் எளிதானதாக மாறி உள்ளது.
ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை லாபம்
இதுபற்றி பஞ்சாப்பை சேர்ந்த யஷ்பால் கூறுகையில், ‛‛ஒரு நாளைக்கு 3 முதல் 5 குவிண்டால் வரை காளான் உற்பத்தி செய்கிறேன். மேலும் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு, சாகுபடி தொடர்பான நுணுக்கங்களை கற்று கொடுத்து வருகிறேன். என்னை பார்த்து தற்போது இளைஞர்கள் பலரும் காளான் வளர்ப்பில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். காளான் வளர்ப்பு மூலம் ஒருவர் ஆண்டுக்கு ரூ.18 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை லாபம் ஈட்ட முடியும்'' என்றார்.