"கைதி எண் 644798.." புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரிக்கு கைதி நம்பர் ஒதுக்கீடு
சென்னை: தெலுங்கு மக்களை அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நவ. 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர், புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதற்கிடையே புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கஸ்தூரிக்கு ஒதுக்கப்பட்டுள்ள கைதி எண் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
சென்னையில் கடந்த நவ. 3ம் தேதி பிராமணர் உள்பட அனைத்து சமுதாய மக்களைப் பாதுகாக்கும் பிசிஆர் எனப்படும் வன்கொடுமை தடுப்பு சட்டம் தேவை என்ற போராட்டம் நடைபெற்றது.

கஸ்தூரி: இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். குறிப்பாக நடிகை கஸ்தூரியும் அதில் கலந்து கொண்டார். அப்போது அவர் தெலுங்கு பேசும் பெண்கள் குறித்து சில சர்ச்சை கருத்துகளைக் குறிப்பிட்டார். இது சர்ச்சையான நிலையில், தெலுங்கு பேசும் மக்கள் தமிழகத்தில் பல இடங்களில் அவர் மீது புகார் அளித்தனர். அதன்படி போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து முன்ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி மனுத்தாக்கல் செய்தார். ஆனால், முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதைத் தொடர்ந்து அவரை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன..
சிறையில் கஸ்தூரி: நடிகை கஸ்தூரி தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், உடனடியாக தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர். கஸ்தூரியைக் கைது செய்த போலீசார், எழும்பூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதிகள் அவரை நவ.,29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவர் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கைதி எண்: இதற்கிடையே சென்னை புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கஸ்தூரிக்கு ஒதுக்கப்பட்ட கைதி எண் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. கஸ்தூரிக்குப் புழல் சிறையில் கைதி எண் 644798 என்ற எண் ஒதுக்கப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது ஜாமீன் மனு வரும் புதன்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீடியோ: சென்னை ஐகோர்ட் முன்ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் பதுங்கி இருப்பதாகத் தகவல் வெளியானது. அங்குத் தயாரிப்பாளர் ஒருவரின் வீட்டில் பதுங்கி இருந்ததாகவும் அவரை அதிகாரிகள் கைது செய்ததாகவும் கூறப்பட்டது. இருப்பினும், கொஞ்ச நேரத்திலேயே கஸ்தூரி பேசும் ஒரு வீடியோ ஒன்றை அர்ஜுன் சம்பத் தனது ட்விட்டரில் வெளியிட்டு இருந்தார்.
அதில் நடிகை கஸ்தூரி, "நான் எங்கும் ஓடி ஒளியவில்லை.. ஹைதராபாத்தில் எனது வீட்டில்தான் இருந்தேன். படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றேன். அங்குதான் தமிழக போலீஸார் வந்து அழைத்ததும் வந்துவிட்டேன். நான் தலைமறைவாக எல்லாம் இல்லை. என்னிடம் போன் இல்லை. எனது வழக்கறிஞர் வாங்கி வைத்துக் கொண்டார். இப்போது கூட வேறு ஒருவரின் செல்போனில் இருந்தே நான் வீடியோ போடுகிறேன்.. நான் ஓடவும் இல்லை ஒளியவும் இல்லை என்பதைத் தெரியப்படுத்தவே இந்த வீடியோவை போட்டுள்ளேன்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications