கபசுரக் குடிநீர் போலியாக தயாரித்தால் கடும் நடவடிக்கை... ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.எச்சரிக்கை
சென்னை: கபசுரக் குடிநீர் பொடி மற்றும் மூலிகை கஷாயம் என்ற பெயரில் போலியாக தயாரித்து விற்பனை செய்வது தெரியவந்தால் கடும் நடவடிக்கை பாயும் என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாகி பரவி வரும் சூழலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய கபசுரக் குடிநீரை போலியாக தயாரித்து சிலர் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர். மக்களும் கொரோனாவில் இருந்து தப்பிக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தால் போதும் என்ற மனநிலையில் போலி கபசுரக் குடிநீர் பொடியை வாங்குகின்றனர்.
மக்களின் அறியாமையை பயன்படுத்தி இது போன்ற மோசடி வேலைகளில் சிலர் ஈடுபட்டு வருவது குறித்த புகார்கள் சுகாதாரத்துறைக்கு சென்றுள்ளன. இந்நிலையில் சென்னையில் ஆய்வுக்கு பின் பேட்டியளித்த கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., கொரோனா தொற்று அதிகம் பரவும் பகுதிகளில் மக்களுக்கு விழிப்புணர்வும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரக் குடிநீரும் வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.
நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து 10 நாட்களுக்கு கபசுரக் குடிநீரும், மூலிகை கஷாயமும் விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவித்த அவர், இந்த தருணத்தை பயன்படுத்தி கபசுரக் குடிநீரை போலியாக தயாரித்து விற்பனை செய்தால் இந்திய மருத்துவத்துறை சார்பில் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
கொரோனாவால் இறந்த முதியவரின் சான்றிதழில் இதயக் கோளாறு என குறிப்பிட்ட டெல்லி மருத்துவமனை
இதனால் பொதுமக்கள் உஷாரான நிலையில் எது உண்மை எது போலி என்பதை கண்டறிந்து கபசுரக் குடிநீரை வாங்கி பருக வேண்டும். கபசுரக் குடிநீர் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் சரியான விகிதத்தில் சேர்க்கப்பட்டுள்ளதா, அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம் தயாரிக்கிறதா என்பதையும் பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.