"ரஜினி பாஜகவுடன் இணைந்து அரசியலுக்கு வருவாரா?".. நிருபர்கள் கேள்விக்கு நக்கல் பதில் கொடுத்த ராதாரவி
சென்னை: ரஜினிகாந்த் பாஜகவுடன் இணைந்து அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு ராதாரவி தனக்கே உரிய பாணியில் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
தருமபுரியில் தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நலச் சங்கம் சார்பில் சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் பாஜக பிரமுகர் ராதாரவி கலந்து கொண்டு பேசினார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு மத்திய அரசு சார்பில் ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. நான் இத்துறையில் இருப்பதால் அதை நிச்சயமாக பெற்றுத் தருவேன்.

பாதிப்பில்லை
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து என்னை நீக்கினார்கள். என்னை மீண்டும் நடிகர் சங்கத்தில் இணைக்க நீதிமன்றம் மூலம் நடிகர் சங்கத் தேர்தலுக்கு தடை பெற்றுள்ளேன். தேர்தலில் போட்டியிடுவது எனது நோக்கமே இல்லை. நான் உறுப்பினராக வேண்டும் என்பதற்காகவே தடை ஆணை வாங்கியுள்ளேன். குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

மக்களை காப்பாற்ற
இந்த சட்டத்தை எல்லோரும் ஆதரிக்க வேண்டும். இதற்கு கையெழுத்து போடாமல் எதிர்ப்பு தெரிவிப்பது துரோகச் செயல். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தற்போது நடக்கும் போராட்டம் இந்திய நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக அல்ல. வேறு நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காகவே நடத்தப்பட்டு வருகிறது.

3 கோடி பேரிடம் கையெழுத்து வீடியோ
குடியுரிமை திருத்தச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் நல்லா படிக்க வேண்டும். படிக்காமல் எதையும் செய்யக் கூடாது. தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் 3 கோடி பேரிடம் கையெழுத்து பெற்றுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் போய் விசாரித்தால் அவர்கள் எதற்காக கையெழுத்து போட்டோம் என்றே தெரியவில்லையாம்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது குடியுரிமை சட்டத்தால் யாருக்கு பாதிப்பு இருக்கிறது என கூறுங்கள் என ஜெயலலிதாவை போல் ஆக்ரோஷமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சப்தம் போட்டார். ஆனால் அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஒரு பதிலையும் சொல்லவில்லை.

ரஜினிகாந்த்
தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் வருவார் என்றார். ரஜினிகாந்த் பாஜகவுடன் இணைந்து அரசியலுக்கு வருவாரா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் இந்தியாவிலேயே மிக முக்கியமான கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள். அது குறித்து எனக்கு தெரியவில்லை. எல்லா சம்பவத்துக்கும் அவர் அறிக்கை கொடுத்து வருகிறார். இருந்தாலும் முடிவு வரட்டும் பார்ப்போம் என ராதாரவி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications