"தமிழ் பெண்ணை கல்யாணம் பண்ணி வைக்கிறோம்!" ஒரே போடாக போட்ட குமரி பெண்கள்! ஒரு நிமிடம் ஸ்டன் ஆன ராகுல்
சென்னை: ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் நேற்றைய தினம் நடந்த சுவாரஸ்ய சம்பவத்தைக் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பகிர்ந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், தொண்டர்களுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கும் நடவடிக்கைகளில் அக்கட்சி ஈடுபட்டு உள்ளது.
இதற்காக ராகுல் காந்தி நாடு முழுவதும் மாபெரும் பாத யாத்திரையை மேற்கொண்டு உள்ளார். இது பாஜகவுக்கு எதிராக மக்களை ஒருங்கிணைக்க உதவும் என்று அவர் நம்புகிறார்

காங்கிரஸ்
வரும் 2024 நடக்கும் மக்களவை தேர்தலுக்கு முன்னதாக பல்வேறு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலும் நடக்க உள்ளது. இதில் பாஜகவை வீழ்த்தினால், அது எதிர்க்கட்சிகளுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கும். இந்த ஒரு சூழலில் தான் ராகுல் காந்தி மாபெரும் பாத யாத்திரையைத் தொடங்கி உள்ளார். ஒற்றுமை பாத யாத்திரை என்று அழைக்கப்படும் இந்த நடைப்பயணம் கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை செல்கிறது.

பாத யாத்திரை
கடந்த புதன்கிழமை கன்னியாகுமரியில் இந்த பாத யாத்திரை தொடங்கியது. இதனைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மொத்தம் 150 நாட்கள் தொடர்ச்சியாகப் பாத யாத்திரை செல்லும் ராகுல் காந்தி மொத்தம் 3570 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே கடக்க உள்ளார். இதன் மூலம் எளிய மக்களுடனான தொடர்பை அதிகப்படுத்த முடியும் என்று அக்கட்சி நம்புகிறது. நேற்றைய தினம் தமிழகம் பயணம் முடிந்த நிலையில், இன்று முதல் அவர் கேரளாவில் நடைப்பயணம் மேற்கொள்கிறார்.

திருமணம்
இந்நிலையில், நேற்று மார்த்தாண்டம் பகுதியில் பாத யாத்திரை சமயத்தில் நடந்த ஒரு சுவாரஸ்ய நிகழ்வை அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பகிர்ந்து உள்ளார் .சனிக்கிழமை பிற்பகல் கன்னியாகுமரியின் மார்த்தாண்டத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பயன்பெறும் பெண்களை ராகுல் காந்தி சந்தித்தார். அப்போது ராகுலின் திருமணம் குறித்து ஜாலியாக பேசியுள்ளனர்.

தமிழ் பெண்
அந்த பெண்கள் ராகுல் காந்தியிடம், "நீங்கள் தமிழ்நாட்டின் மீது எந்தளவு அன்பு வைத்து உள்ளீர்கள் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும்" என்றனர். மேலும், ராகுல் காந்திக்குத் தமிழ் பெண்ணை திருமணம் செய்து வைக்கவும் தயாராக இருப்பதாக அந்தப் பெண்கள் குறிப்பிட்டனர். இதைக் கேட்ட ராகுல் காந்தி ஜாலியாக சிரித்தார். இந்தச் சம்பவத்தைப் பகிர்ந்த ஜெய்ராம் ரமேஷ் இது தொடர்பான படங்களையும் வெளியிட்டுள்ளார்.

கண்டெய்னர்
நாடு முழுவதும் நடைப்பயணம் செய்யும் ராகுல் காந்தி உள்ளிட்ட காங். தலைவர்கள் தங்க மொத்தம் 60 கண்டெய்னர்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு நாளும் இந்த கண்டெய்னர்களும் ராகுல் காந்தி அடுத்துச் செல்லும் இடத்திற்கு பேக்-அப் செய்து அனுப்பப்படும். இன்று முதல் ராகுல் காந்தி கேரளாவில் பாத யாத்திரை தொடங்கும் நிலையில், அவை கேரளாவுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

பாஜக
இந்த நடைப்பயணம் காங்கிரஸ் கட்சிக்குப் புத்துணர்ச்சியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் பாஜகவும் இந்த நடைப்பயணத்தைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. முதலில் ராகுல் காந்தி அணிந்து இருக்கும் டீ-சர்டின் விலை ரூ. 41 ஆயிரம் என்று சாடியிருந்தது. அதற்குப் பிரதமர் மோடி 10 லட்சம் மதிப்புள்ள ஆடையை அணிந்ததாகக் காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்து இருந்தது.












Click it and Unblock the Notifications