சொத்து தானம் தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. பெற்றோர்கள் அறிய வேண்டிய மாற்றம்
டெல்லி: ஒரு நபரின் அசையாச் சொத்துகளை வாய்மொழியாக தானமாக மற்றொருவருக்கு கொடுத்துவிட முடியாது என்றும், அவ்வாறு கொடுப்பது சட்டப்படி செல்லாது என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெற்றோர்கள் தங்களின் வாழ்நாளில் ஒரு பிள்ளைக்குச் சாதகமாகச் சொத்தை வாய்மொழியாக ஒதுக்கிவிட்டு, பத்திரப் பதிவு செய்யாமல் இறந்துவிட்டால், பிற்காலத்தில் மற்ற வாரிசுகள் அதற்குச் சட்டப்படி உரிமை கோர முடியும்.
அனில் குமார் குப்தா என்பவர் தனது தந்தையின் சொத்தைப் பிரித்துத் தரக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது பெற்றோர் காலமான பிறகு, அந்த சொத்து அவர்களின் 6 பிள்ளைகளுக்கும் சமமாக (தலா 1/6 பங்கு) சேர வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். மேலும், தனது 4 சகோதரிகள் தங்களின் பங்குகளைத் தனக்கு சாதகமாக 'உரிமைத் துறப்பு ஆவணம்' மூலம் எழுதிக் கொடுத்துவிட்டதால், அந்தச் சொத்தில் தனக்கு 5/6 பங்கு உரிமை உள்ளது என்றும் நீதிமன்றத்தில் வாதிட்டார்

ஆனால், இறந்து போன மற்றொரு சகோதரரின் வாரிசுகள் இந்த வழக்குக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட சொத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது தளங்களை, தந்தை உயிரோடு இருந்தபோதே வாய்மொழியாக தனது மகனுக்கு தானமாக வழங்கிவிட்டார் என்றும், குடும்ப சொத்துகள் ஏற்கனவே வாய்மொழியாகப் பிரிக்கப்பட்டுவிட்டன என்றும் சகோதரிகள் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விகாஸ் மகாஜன், தனது தீர்ப்பில் கூறுகையில், 1882-ம் ஆண்டின் சொத்துரிமை மாற்றுச்சட்டத்தின் பிரிவு 123-ன் படி, ஓர் அசையா சொத்தின் மீதான உரிமை தானமாக வழங்கப்பட வேண்டுமானால், அது கட்டாயம் எழுத்து வடிவில் இருக்க வேண்டும்.
அத்துடன் தானம் அளிப்பவர் அதில் கையெழுத்திட்டு, குறைந்தது 2 சாட்சிகள் முன்னிலையில் அது முறைப்படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டியது அவசியம் ஆகும். அவ்வாறு செய்யப்படாத பட்சத்தில், அந்தத் தானத்தின் மூலம் சொத்தின் உரிமை மற்றொருவருக்கு போய்ச் சேராது. '
1996-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பில் அசையா சொத்துகளைத் தானமாக வழங்க முறையான பதிவு செய்யப்பட்ட ஆவணம் அவசியம் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது வாய்மொழியாக சொத்து பிரிக்கப்பட்டது என்பதற்கோ அல்லது தந்தை சொத்தை தானமாக கொடுத்தார் என்பதற்கோ வாரிசுகள் தரப்பில் எந்தவொரு வலுவான ஆவணங்களோ, நம்பத்தகுந்த சாட்சியங்களோ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை" இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
ஒரு நபர் தனது அசையா சொத்துக்களை வாய்மொழியாகத் தானமாகக் கொடுத்துவிட முடியாது என்றும், அவ்வாறு வாய்மொழியாகக் கொடுப்பது சட்டப்படி செல்லாது என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் மிகத் தெளிவாகத் தீர்ப்பளித்திருக்கிறது. நம்மூரில் "என் காலத்திற்குப் பிறகு இந்த வீடு உனக்குத்தான்", "என் அப்பா அன்றைக்கே இதை என் தம்பிக்குக் கொடுப்பதாகச் சொன்னார்" என்று வாய்மொழியாகப் பேசிக்கொள்வது மிகச் சாதாரணம். ஆனால், நீதிமன்றத்தைப் பொறுத்தவரை அசையா சொத்துக்களுக்கு (நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு) வாய்மொழி வாக்குறுதிகள் 100% செல்லாது என்பதே மக்கள் அறிய வேண்டிய முக்கியமான விஷயம் ஆகும்.
அதேபோல் சொத்துரிமை மாற்றுச்சட்டம் பிரிவு 123-ன் படி, ஒருவர் தனது சொத்தை மற்றவருக்குத் தானமாகத் தர நினைத்தால், அது கண்டிப்பாக எழுத்து வடிவிலான பத்திரமாக இருக்க வேண்டும். சொத்தை தருபவர் அதில் கையெழுத்திட வேண்டும். மிக முக்கியமாக, குறைந்தது 2 சாட்சிகள் (Witnesses) முன்னிலையில் அது சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.
பெற்றோர்கள் தங்களின் வாழ்நாளில் ஒரு பிள்ளைக்குச் சாதகமாகச் சொத்தை வாய்மொழியாக ஒதுக்கிவிட்டு, பத்திரப் பதிவு செய்யாமல் இறந்துவிட்டால், பிற்காலத்தில் மற்ற வாரிசுகள் அதற்குச் சட்டப்படி உரிமை கோர முடியும். இந்த வழக்கில் கூட, தந்தை தங்களுக்கு வாய்மொழியாகத் தந்தார் என்று சொன்ன சகோதரரின் வாரிசுகளின் வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. நீதிமன்றத்திற்குச் சென்றால் "அவர் சொன்னார், இவர் கேட்டார்" என்ற சாட்சியங்களை விட, பதிவு செய்யப்பட்ட முறையான பத்திரம் இருக்கிறதா என்பதைத்தான் பார்ப்பார்கள். 1996-ம் ஆண்டின் உச்சநீதிமன்ற தீர்ப்பும் இதையேதான் வலியுறுத்துகிறது.














Click it and Unblock the Notifications