ராகுல் காந்தி, விஜய் நட்பால் காங்கிரஸ்- தவெக கூட்டணி? உடைத்து பேசிய காங்கிரஸ் செல்வப்பெருந்தகை!
சென்னை: தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கு தரப்படும் என்று விஜய் சொன்னது தமிழக அரசியலில் பேசுபொருள் ஆகியிருக்கிறது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் சரவணன், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ்- தவெக கூட்டணி என்று பேச்சுக்கள் எழுந்த நிலையில், இது தொடர்பாகக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜய், பல்வேறு அரசியல் கட்சிகளையும் மறைமுகமாக விமர்சித்தார்.

விஜய் பேச்சு: குறிப்பாக இறுதியில் தாங்கள் வென்று ஆட்சியை அமைத்தால் தங்களுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும் எனக் குறிப்பிட்டார். இது தமிழக அரசியலில் பேசு பொருள் ஆனது. இது கூட்டணிக்காக விஜய் விடுத்துள்ள அழைப்பாகவே பார்க்கப்பட்டது. பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இதை வரவேற்றனர்.
கடிதம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் சரவணன், முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் கூட எழுதி இருந்தார். விஜய் மாநாட்டில் பேசியதைக் குறிப்பிட்ட சரவணன், தற்போதுள்ள அமைச்சரவையிலும் கூட்டணிக் கட்சிக்குப் பங்க தர வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், "தங்கள் கட்சி தொடங்கிய காலம் முதல் கூட்டணிக் கட்சியின் ஆதரவில் தான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள். எனவே தமிழகத்தில் தங்கள் தலைமையில் கூட்டணி ஆட்சி மலர்ந்தால் நல்லது. இதைத் தான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.
இது தமிழக அரசியலில் பேசுபொருள் ஆனது. விஜய் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கலாம் என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தன. இதற்கிடையே இது தொடர்பாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கமளித்துள்ளார். இந்தியா கூட்டணி வலுவாக இருப்பதாகத் தெரிவித்த செல்வப்பெருந்தகை, தவெக கட்சியுடன் கூட்டணி வைக்க அவசியம் இல்லை என்றும் ராகுல் காந்திக்கும் விஜய்க்கும் நட்பு இருந்தாலும் நட்பு வேறு அரசியல் வேறு என்று அவர் தெரிவித்தார்.
செல்வப்பெருந்தகை: இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், "இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது. எனவே, தவெக உடன் கூட்டணி என்ற கேள்விக்கே இடமில்லை. எங்களுக்குள் சலசலப்பு, சங்கடம் இருந்தால் இந்த கேள்வியைக் கேட்கலாம். ஆனால், எங்கள் கூட்டணிக்குள் அப்படி எதுவும் இல்லை.
நாளைய தினமே வேறு ஒருவர் வந்து கட்சியை ஆரம்பிக்கலாம். அவரும் கூட்டாட்சி என்று சொன்னால்.. அதற்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்க முடியுமா. இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது. சிந்தாமல் சிதறாமல் அடுத்த தேர்தலைச் சந்திப்போம்.. நாங்கள் தவெக உடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
நட்பு வேறு: விஜய்க்கும், ராகுல் காந்திக்கும் இடையே நல்லுறவு இருக்கிறது. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ராகுல் காந்தியை நேரிலேயே விஜய் சந்தித்துப் பேசியுள்ளார். ராகுல் மீது விஜய்க்குப் பற்று இருக்கிறது எல்லாம் சரி தான். ஆனால், அரசியல் வேறு நட்பு வேறு" என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications