ராகுல் + விஜய்.. "ஃபயர்" விட்ட காங்கிரஸ்.. தவெகவிற்கு ஆதரவு கிடைச்சிடுச்சே?
சென்னை: தமிழகத்தில் தவெகவிற்கு மெஜாரிட்டியை எட்ட 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவையாக உள்ளது. காங்கிரஸ் கட்சியிடம் விஜய் ஆதரவு கோரியுள்ளார். இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், 'ராகுல் + விஜய்' என எழுதி 'ஃபயர்' விடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியின் ஆதரவு வழங்க தயாராகிவிட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 224 சட்டசபை தொகுதி உள்ளது. ஆட்சியை பிடிக்க 118 தொகுதிகளில் ஒரு கட்சி வெற்றி பெற வேண்டும். இல்லாவிட்டால் கூட்டணி கட்சி ஆதரவில் ஆட்சியை பிடிக்க வேண்டும். நடந்து முடிந்த தேர்தலில் விஜய்யின் தவெக108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தனி மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் தமிழகத்தில் தனி்ப்பெரும் கட்சியாக மாறி உள்ளது.

தவெகவிற்கு மெஜாரிட்டிக்கு 10 இடங்கள் குறைவாக கிடைத்துள்ளது. விஜய் 2 தொகுதியில் வென்றுள்ளார். ஒரு தொகுதியை ராஜினாமா செய்யும்போது எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 108 ல் இருந்து 107 ஆக குறையும். இதனால் விஜய்யின் மெஜாரிட்டிக்கு 11 எம்எல்ஏக்கள் தேவையாக உள்ளது. இதனால் பிற கட்சிகளிடம் ஆதரவு கேட்டு வருகிறார் விஜய்.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியிடமும் விஜய் ஆதரவு கோரியுள்ளார். தமிழகத்தில் தற்போது காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் உள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் 5 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற விஜய் தீவிரமாக முயன்று வருகிறார். நேற்றைய தினம் விஜய்யிடம், ராகுல் காந்தி பேசி வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவரிடம் நேரடியாக விஜய் ஆதரவு கோரியுள்ளார்.
இதனை இன்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் உறுதி செய்தார்.
இந்த பேச்சுவார்த்தை நடுவே தான் பீகார் காங்கிரஸ் கட்சி போட்ட எக்ஸ் பதிவு தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது. அந்த பதிவில் Rahul + Vijay பெயரை சேர்த்து 'ஃபயர்' விடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு போட்டோ பதிவிடப்பட்டுள்ளது. அதில் ராகுல் காந்தி, விஜய் ஆகியோர் சிரித்தபடி இருக்கின்றனர். மேலும் நேற்று ராகுல் காந்தி போட்ட எக்ஸ் பதிவும், இன்று விஜய் போட்ட எக்ஸ் பதிவும் இணைக்கப்பட்டுள்ளது.
Rahul + Vijay! 🔥 #Thalapathy #RahulGandhi #TamilNadu #TVK pic.twitter.com/9fwOPymXFp
— Bihar Congress (@INCBihar) May 5, 2026
அதாவது தேர்தலில் விஜய் வென்றபிறகு ராகுல் காந்தி நேற்று விஜய்யை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். பிறகு விஜய்யிடம் பேசியதாவும், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். அதற்கு இன்று விஜய் பதிலளித்து இருந்தார். அதில், ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்து இருந்தார். இந்த பதிவை தான் பீகார் காங்கிரஸ் பகிர்ந்துள்ளது.
பொதுவாக ஒரு சட்டசபை தேர்தலில் ஒரு கட்சி வெல்லும்போது காங்கிரஸ் தலைவர்கள் தொலைபேசி அல்லது சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவிப்பதும் இயல்பான ஒன்று தான். அதனை பிற மாநிலங்களின் சமூக வலைதள பக்கங்களில் பகிர்வது இல்லை. ஆனால் தற்போது பீகார் காங்கிரஸ் கட்சியின் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ராகுல் + விஜய் என்று எழுதி "ஃபயர்" விட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்க தயாராகிவிட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications