எஸ்பிஐ வங்கியில் அக்கவுண்ட் இருந்தால் ரூ.1 கோடி இன்சூரன்ஸ்.. ஊழியர்களுக்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் ரயில்வே ஊழியர்கள் சுமார் 7 லட்சம் பேர் சம்பள கணக்கு பராமரித்து வரும் நிலையில், ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.1 கோடி காப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் மரணம் அடைந்தால் ஒரு கோடி காப்பீடு தொகையாக அளிக்கப்படும் என்று ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வேயின் இந்த அறிவிப்பு ரயில்வே ஊழியர்களுக்கு பெரும் நிம்மதியாக அமைந்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக ரயில்வே உள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வே துறையில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். ரயில்வே ஊழியர்களை பொறுத்தவரை சம்பளம், பயண சலுகை என பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

ரயில்வே ஊழியர்கள் வங்கி கணக்கு
இதனால், ரயில்வேயில் வேலை என்பது பலருக்கும் கனவாக உள்ளது. பணி பாதுகாப்பு, விடுமுறை சலுகைகள் என பல்வேறு சலுகைகளும் இருப்பதால் ரயில்வே வேலை என்பது பலரும் லட்சியமாக நினைக்கும் தொழிலாக உள்ளது. ரயில்வேயில் 12 லட்சத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். ரயில்வேயை பொறுத்தவரை சம்பளங்கள் ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவுவைக்கப்படுகிறது.
மாதம் தோறும் ஊழியர்களின் பணி செய்த நாட்களை கணக்கில் கொண்டு சம்பளம் வங்கி கணக்கில்தான் வரவுவைக்கப்படும். இந்த நிலையில்தான், ஸ்டேட் வங்கியுடன் இந்திய ரயில்வே அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
ரூ.1 கோடி விபத்து காப்பீடு
அதன்படி, ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.1 கோடி விபத்து காப்பீடு தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போதுள்ள விபத்து காப்பீடான ரூ.1.20 லட்சத்தை காட்டிலும் பல மடங்கு அதிகமாகும். இதுபோல இயற்கை மரணம் அடையும் ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.10 லட்சத்திற்கான காப்பீடும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ள நடைமுறையின் கீழ் ரயில்வே குரூப் A பிரிவு ஊழியர்களுக்கு ரூ.1.20 லட்சமும், குரூப் B பிரிவு ஊழியர்களுக்கு ரூ.60 ஆயிரமும், குரூப் C பிரிவு ஊழியர்களுக்கு ரூ.30 ஆயிரமும் மத்திய அரசின் ஊழியர்கள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அளிக்கப்படுகிறது.
ரயில்வே ஊழியர்கள் மகிழ்ச்சி
தற்போது ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்களில் சுமார் 7 லட்சம் பேர் எஸ்.பி.ஐ வங்கியில் கணக்கை பராமரிக்கிறார்கள். ஊழியர் நலனை கருத்தில் கொண்டு எஸ்.பி.ஐ வங்கியுடன் இந்திய ரயில்வே கைகோர்த்துள்ளதாக ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரயில்வே இது தொடர்பாக கூறுகையில், ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரயில்வேயில் களத்தில் நின்று பணியாற்றும், குறிப்பாக குரூப் C ஊழியர்களுக்கு இந்த ஒப்பந்தம் பெரிதும் பலனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வேயின் இந்த அறிவிப்பு, ரயில்வே துறையில் வேலை பார்க்கும் பல லட்சக்கணக்கான ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரயில்வே துறை மட்டும் இன்றி, இதர பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் இதே போன்ற திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும் என்பது பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications