"தமிழ் கற்றுக்கொள்ளுங்கள்.. அது தான் சரி!" ரயில்வே ஊழியர்களுக்கு அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் அட்வைஸ்
சென்னை: தமிழ்நாட்டிற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அடுத்த வரும் வாரங்களில் பிரதமர் மோடி தமிழகத்தில் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைக்க இருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் இரண்டு நாள் பயணமாகச் சென்னை வந்திருந்தார்.
தெற்கு ரயில்வே, ஐசிஎஃப் உள்ளிட்ட ரயில்வே அமைப்புகளால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பல்வேறு ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை அவர் பார்வையிட்டார்.

அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ்
பெரம்பலூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் தற்போது வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன் இரண்டு ரேக்குகளை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் ஆய்வு செய்தார். வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கும் பணிகள் நிறைவடையும் என்று அவர் தெரிவித்தார். இந்த வந்தே பாரத் ரயில்கள் மணிக்கு சுமார் 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். வரும் ஆகஸ்ட் 2023க்குள் குறைந்தது 75 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்க இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது.

ஐசிஎஃப் தொழிற்சாலை
இது குறித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் மேலும் கூறுகையில், "இந்திய ரயில்வே வரலாற்றில் இது ஒரு பெரிய மைல்கல். பயணிகள் ரயில் சேவைகளை நவீனமயமாக்குவதில் இது முக்கிய விஷயம். ஐசிஎஃப் தொழிற்சாலை சிறப்பான ரயில் பெட்டிகளை உருவாக்கி வருகிறது. வந்தே பாரத் ரயில்களை மணிக்கு 160 கிமீ வேகத்தில் இயக்கும் வகையில் தடங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.

தனியார்மயமாக்கும் திட்டம்
தொடர்ந்து ரயில்வேயை தனியார்மயமாக்கும் திட்டம் உள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை என்று அவர் பதில் அளித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், "வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பெட்டிகளில் விபத்தின் போது காக்கும் கவாச் தொழில்நுட்பம் பொருத்தப்படுகிறது. இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்களை மாற்றியமைப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது" என்றார்.

தமிழ் கற்க வேண்டும்
மேலும், தமிழகத்தில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்கள் தமிழ் கற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இது குறித்து அவர், "தமிழ்நாட்டில் பணிபுரியும் அனைத்து ரயில்வே ஊழியர்களும் ரயில் பயணிகளுடன் சுமுகமான மற்றும் பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்யத் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தியா பல அழகான மொழிகளைக் கொண்ட நாடு, ஒவ்வொன்றின் அழகையும் நாம் அனுபவிக்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்

ரயில் பாதைகள்
பாதையின் வேகத்தை அதிகரிப்பதற்கு முன் ரயில்கள், தடங்கள், பாதுகாப்பு மற்றும் பாலங்கள் என பல்வேறு அம்சங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இவை முறையாக மேம்படுத்தப்பட்டால் மட்டுமே, ரயில்களின் வேகத்தை அதிகரிக்க முடியும். வந்தே பாரத் ரேக்கின் ஆயுட்காலம் 35 ஆண்டுகள் வரை இருக்கும். தெற்கு ரயில்வேயின் ரயில் பாதைகளில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட ரயில்களின் வேகம் மணிக்கு 110 கிமீ ஆகும். வந்தே பாரத் ரயில்களுக்கு ஏற்ப பாதையைப் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications