ரிசர்வேஷனில் சூப்பர் மாற்றம்.. அவசர ஒதுக்கீட்டு கோரிக்கை குறித்து ரயில் பயணிகளுக்கு அறிவிப்பு.. சபாஷ்
சென்னை: ரயிலில் பயணிக்கும் பயணிகள், அவசர ஒதுக்கீட்டு கோரிக்கை இருப்பின் அவைகளை, பயணிப்பதற்கு ஒருநாள் முன்பாகவே சமர்ப்பிக்க வேண்டும் என்று புதிய அறிவுறுத்தலை ரயில்வே அமைச்சகம் தற்போது வெளியிட்டிருக்கிறது.. ரயில்வே பயண அட்டவணை தயாரிக்கும் நேரத்தை 4 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரத்திற்கு மாற்றும் திட்டத்தை சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில், மீண்டும் புதிய உத்தரவு எதற்காக? இதற்கு என்ன காரணம்? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
நாளுக்கு நாள் ரயில்வேயின் தேவை பொதுமக்களுக்கு அதிகரித்தவாறே உள்ளது.. எனவேதான் இந்தியன் ரயில்வே பயணிகளின் வசதிக்காகவும், நன்மைக்காகவும், ஏராளமான வசதிகளை ஆன்லைனில் செய்து தந்துள்ளது..

ரயிலில் பயணம் செய்ய, 2 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது. அதேபோல, ரிசர்வேஷனில், தனிப்பட்ட நபர் ஒருவர் தன்னுடைய பயணத்தை ரத்து செய்ய வேண்டி இருந்ததால், 24 மணி நேரத்துக்கு முன்னதாக ரயில் நிலைய முதன்மை டிக்கெட் கண்காணிப்பாளரிடம் கடிதம் வழங்கி மாற்றிக் கொள்ளும் வசதி உண்டு..
ரயில்வே வாரியம் பரிந்துரை
அதேபோல, ரயில்கள் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பு, முன்பதிவு அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.. இதனால், கடைசி நேரத்தில் பயணச்சீட்டு உறுதியாகாத நிலையில், பயணத்தை மாற்றியமைக்க பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.. எனவே, இதை கருத்தில் கொண்டு, 8 மணி நேரத்துக்கு முன்பாக முன்பதிவு அட்டவணையை வெளியிட வேண்டும் என்ற ரயில்வே வாரிய பரிந்துரையை செயல்படுத்துமாறு துறையின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிரடியாக உத்தரவிட்டார்.
கடந்த ஜூன் மாதம் அட்டவணை
இதைத் தொடர்ந்து, முன்பதிவு அட்டவணை தயாரிப்பு குறித்த விவரத்தை ரயில்வே வாரியமும் கடந்த ஜுன் மாதம் வெளியிட்டிருந்தது.
அதன்படி, அதிகாலை 5 முதல் பிற்பகல் 2 மணி வரை புறப்படும் ரயில்களுக்கான முதல் முன்பதிவு அட்டவணை, முந்தைய நாள் இரவு 9 மணிக்கு தயாரிக்கப்படும். பிற்பகல் 2 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை புறப்படும் ரயில்களுக்கு 8 மணி நேரத்துக்கு முன்பாக முதல் முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி, பயணிகளுக்கு சர்ப்ரைஸ் தரப்பட்டிருந்தது.
ரிசர்வேஷன் பட்டியல்
எனினும், காத்திருப்பு பயணிகள் முன்னதாகவே தங்களின் நிலையை அறிந்து மாற்று ஏற்பாடுகளை செய்ய, அடுத்தக்கட்ட சர்ப்ரைஸ் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.. அதன்படி, அவசர ஒதுக்கீட்டு (எமர்ஜென்சி கோட்டா-இ-கியூ) கோரிக்கையை, நாளுக்கு ஒரு நாள் முன்பாகவே பயணிகள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதாவது, நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 2 மணி வரை புறப்படும் ரயில்களுக்கான இ-கியூ கோரிக்கைகள் முந்தைய நாளின் மதியம் 12 மணி வரை பெறப்படும். மதியம் 2.01 மணி முதல் இரவு 11.59 மணி வரை புறப்படும் ரயில்களுக்கான கோரிக்கைகள் முந்தைய நாளின் மாலை 4 மணி வரை பெறப்படும்.. ஆனால் எக்காரணம் கொண்டும், பயண நாளன்று சமர்ப்பிக்கப்படும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது.
அதுமட்டுமல்ல, ஞாயிறு மற்றும் பொதுவிடுமுறை நாட்களில் புறப்படும் ரயில்களுக்கான கோரிக்கைகள் முன்தினம் வேலை நாளின் அலுவலக நேரத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்...
மீண்டும் சர்ப்ரைஸ்
அதேபோல, பயண அட்டவணையில் தாமதம் ஏற்படாதவாறு, ரயில்கள் நேரத்திற்கு புறப்படுவதற்கான நடவடிக்கையாக இத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் இ/கியூ கோரிக்கைகளின் உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டும் என்றும் ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது.
பயணிகள் ரிசர்வேஷன் முறையில், மீண்டும் முக்கிய மாற்றத்தை இந்தியன் ரயில்வே கொண்டு வந்துள்ளது பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், வசதியையும் தந்து வருகிறது.
இதனிடையே, ஐஆர்சிடிசி வெப்சைட்டில், 1 மணி நேரத்திற்கு 32000 டிக்கெட்டுகளே ரிசர்வ் செய்ய முடியும் நிலையில், அதனை ஒன்றரை லட்ச ரூபாயாக அதிகரிக்கவும் ரயில்வே திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications