கைவிட்ட இண்டிகோ.. சென்னை உள்பட நாடு முழுவதும் ரயில்களில் கூடுதல் பெட்டி.. பயணிகளே ரூட்டை மாற்றுங்க
சென்னை: நாடு முழுவதும் இன்று ஒரேநாளில் 1,000 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பல விமானங்கள் தாமதமாகி உள்ளன. இதனால் விமான நிலையங்களில் பயணிகள் தவித்து வரும் நிலையில் இந்திய ரயில்வே முக்கிய நகரங்களுக்கு இடையே இயங்கும் 37 ரயில்களில் கூடுதலாக 116 பெட்டிகளை இணைத்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து கோவை, சேலம், கொல்லம் செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 1ம் தேதி முதல் இண்டிகோ விமான சேவையில் பாதிப்பு ஏற்பட தொடங்கியது. டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் இந்த பிரச்சனை அதிகரித்தது. ஒவ்வொரு நாளும் பல நூறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் பல நூறு விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. இன்று நிலைமை இன்னும் மோசமானது. இன்று ஒரே நாளில் நாடு முழுவதும் 1,000 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விமான பணியாளர்கள் பற்றாக்குறை, தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்டவை காரணமாக கூறப்படுகிறது. இருப்பினும் முக்கிய காரணம் என்பது பைலட்டுகளின் பற்றாக்குறை தான். அதாவது, சமீபத்தில் மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் பைலட்டுகளுக்காக விமான கடமை நேர வரம்புகள் (FDTL or Flight Duty Time Limitations) அமல்படுத்தியது. இது கடந்த 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதன்மூலமாக விமானிகளுக்கு கூடுதல் சலுகைகள் கிடைக்கிறது. அதாவது ஒரு விமானியை தொடர்ந்து 2 நாட்களுக்கு மேல் இரவுப்பணியில் அமர்த்த கூடாது. ஒரு விமானிக்கு ஒவ்வொரு வாரமும் 48 மணிநேரம் ஓய்வு தர வேண்டும் என்பன உள்பட பல விதிகள் உள்ளன.
இதற்கு ஏற்ப அனைத்து விமான நிறுவனங்களும் மாறி வரும் நிலையில் இண்டிகோவால் மாற முடியவில்லை. அதாவது பைலட்டுகளை ரோட்டோஷன் முறையில் பணியமர்த்துவதில் இண்டிகோ தவறியுள்ளது. இதனால் தான் அடுத்தடுத்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் பலரும் தங்களின் பயண திட்டத்தை மாற்றி வருகின்றனர்.
இதற்கிடையே தான் விமான பயணிகளின் நலன் கருதி இந்தியன் ரயில்வே கூடுதல் பெட்டிகளை ரயில்களில் இணைத்துள்ளது. இதுபற்றி இந்தியன் ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகளுக்காக 37 ரயில்களில் 116 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு மண்டலங்களில் இயங்கும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. விமான பயணிகள் தங்களின் பயணத்துக்கான மாற்று திட்டத்தை ஏற்படுத்து வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் பெட்டிகள் என்பது ஸ்லீப்பர், ஏசி சேர், இரண்டாம் வகுப்பு பெட்டிகள் என ரூட்டை பொறுத்து மாறுபடும். வடக்கு ரயில்வே 5 சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் இருந்து கோவை, சேலம், கொல்லம், திருவனந்தபுரம், ஆலப்புழா உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.
இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‛‛நாடு முழுவதும் 30 சிறப்பு ரயில்களை இயக்கும் திட்டம் உள்ளது. இதன்மூலம் ஒரு டிரிப்பிற்கு 30,780 பயணிகளை ஏற்றி செல்ல முடியும். சிறப்பு ரயில், கூடுதல் பெட்டிகள் என்று கிட்டத்தட்ட 26 லட்சம் பயணிகளுக்கு பலனளிக்கும் வகையில் இந் திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது'' என கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications