தெற்கு ரயில்வே சென்னையில் சத்தமே இல்லாமல் செய்து வரும் சூப்பர் விஷயம்.. வாகன ஓட்டிகள் ஹேப்பி
சென்னை: சென்னையில் உள்ள 28 முக்கிய ரயில் நிலையங்களில் மின்சார வாகனத்திற்கான சார்ஜிங் மையம் அமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. சிந்தாதிரிப்பேட்டை, மூர்மார்க்கெட், கலங்கரை விளக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி, கோட்டூர்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அடுத்தகட்டமாக செங்கல்பட்டு, திரிசூலம், தரமணி, சென்னை கடற்கரை, ஆவடி, கிண்டி ஆகிய ரயில் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
சென்னை மக்கள் பேருந்துகளைவிட மின்சார ரயிலையே முதன்மையாக போக்குவரத்தாக பயன்படுத்துகிறார்கள். ஒரு நாள் ஆவடி வழித்தடத்திலோ அல்லது செங்கல்பட்டு, தாம்பரம் வழித்தடத்திலோ, கும்மிடிப்பூண்டி வழித்தடத்திலோ மின்சார ரயில்கள் ஓடாமல் போனால், மொத்த சென்னையும் ஸ்தம்பித்து போகும். அந்த அளவிற்கு சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரயில் சேவை இருந்து வருகிறது.

பள்ளி-கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் மின்சார ரயில்களில் பயணிப்பதை விரும்புகிறார்கள். நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் மின்சார ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். அப்படி பயணிக்க வரும் பயணிகளுக்காக, தெற்கு ரயில்வே பல்வேறு வசதிகளை செய்து தருகிறது.
அந்த வகையில், ரயில் பயணிகளின் வசதிக்காக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் அமைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே உள்ள சார்ஜிங் வசதிகளை மேம்படுத்தவும், சில ரயில் நிலையங்களில் புதிதாக அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது. இது ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் மின்சார ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் வசதி செய்வதால், பலரும் மின்சார வாகனங்களுக்கு மாற வாய்ப்பு உள்ளது. மின்சார வாகனங்கள் வைத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தியாக மாறி உள்ளது.
சிந்தாதிரிப்பேட்டை, மூர்மார்க்கெட், கலங்கரை விளக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி, கோட்டூர்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. அடுத்தகட்டமாக செங்கல்பட்டு, திரிசூலம், தரமணி, சென்னை கடற்கரை, ஆவடி, கிண்டி ஆகிய ரயில் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. புதிய சார்ஜிங் மையம் பொறுத்தவரையில் சென்னை முழுவதும் உள்ள 28 முக்கிய ரயில் நிலையங்களில் அமைக்கப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறினார்கள்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "சென்னை மக்களின் வசதிக்காக அனைத்து லோக்கல் ரயில் நிலையங்களிலும் மின்சார இருசக்கர வாகனம் மற்றும் கார்களுக்கு சார்ஜிங் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சிந்தாதிரிப்பேட்டை, சென்ட்ரல் உள்ளிட்ட சில ரயில் நிலையத்தில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்யும் மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நடவடிக்கை மின்சார வாகனங்கள் பயன்படுத்தும் பயணிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். விரைவில் இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து, பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட இருக்கிறோம்" என்றார்..












Click it and Unblock the Notifications