வாடை காற்று.. மண் வாசம்.. தமிழகத்தின் பல இடங்களை குளிர்வித்த மழை.. மகிழ்ந்த மக்கள்
சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்ததன் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.
ஒரு பக்கம் வெயில் வாட்டி வதைத்து வந்தாலும் மறு பக்கம் மழையால் மக்கள் கொஞ்சம் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

ஒருவர் சாவு
நேற்று ஈரோட்டில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. கருங்கல்பாளையம் பகுதியில் இருந்த டீக்கடையின் மேற்கூரை பலத்த காற்றில் பறந்து, மழைக்காக சாலையோரம் ஒதுங்கி நின்ற முதியவர் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இடிமின்னல் மழை
கோவை மாவட்டம் சூலூரில் இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் அங்கு வெப்பத்தின் தாக்கம் தணிந்து, பூமி குளிர்ந்து காணப்பட்டது. பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருப்பூரில் கரட்டாங்காடு, ராயபுரம், வெள்ளியங்காடு, படியூர, மங்கலம், செட்டிபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்தது.

வாழைகள் சேதம்
விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான காற்றுடன் மழை பெய்ததது வெப்பம் தணிந்து காணப்பட்டது. அதேநேரம் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அகரத்துப்பட்டி, திருமலையாபுரம், ரெட்டியப்பட்டி சூறைக்காற்று வீசியதால், ஏராளமான வாழை மரங்கள் சேதம் அடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனியில் மழை
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான ரெட்டியார் சந்திரம், மூலச்சத்திரம் முத்தினம்பட்டி, காமாட்சி புரம் பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சாலையில் விழுந்த மரங்கள்
நீலகிரி மாவட்டம் உதகையில் நேற்று கனமழை கொட்டித்தீர்த்ததால் சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது, வாகனங்கள் செல்ல முடியாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.குன்னூரில் நேற்று பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த பலத்த மழையால் மரங்கள் விழுந்ததில் 5 வாகனங்கள் சேதம் அடைந்தன. மின் கம்பங்கள் சேதமடைந்ததால் குன்னூர் பகுதி நேற்று இரவு இருளில் மூழ்கியது.












Click it and Unblock the Notifications