பொத்துக்கிட்டு ஊத்தப் போகுது வானம்.. 9 மாவட்டங்களில்.. கோவை, நீலகிரியில் இடி மின்னலோடு வெளுக்குமாம்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் ஒன்பது மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னையில் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது. நாளைய தினம் வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் அவ்வப்போது வெப்பசலனத்தினால் மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக உள் மாவட்டங்களில் மழை கொட்டி வருவதால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.

கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி, ராஜபாளையம், விருதுநகர், திருப்பூரில் 6 செமீ மழை பதிவாகியுள்ளது. உத்தமபாளையம், கள்ளிக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூரில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. திருநெல்வேலி, சோலையாறு பகுதிகளில் 2 செமீ மழை பதிவாகியுள்ளது.
இன்றைய தினம் கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி,கிருஷ்ணகிரி, நாமக்கல் தேனி, வேலூர், திண்டுக்கல், மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஜூலை 23ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும், தென் கிழக்கு அரபிக்கடல், கேரளா, கர்நாடகா அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்றும் மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications