கிளம்பிருச்சேப்பா.. ஒரு வாரத்துக்கு மழை விடாது போலயே.. இன்னைக்கெல்லாம் செம மழை விட்டு வெளுக்க போகுது
சென்னை: சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும்நிலையில், தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கும் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையானது, வரும் ஒரு வாரத்துக்கு நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் கடந்த சில நாட்களாகவே, பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையும் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழையும் வெளுத்து வாங்கி வருகிறது.

திருச்சி திண்டுக்கல்: திருச்சி, கும்பகோணம், நெல்லை, தூத்துக்குடி, கோவில்பட்டி, தேனி,சேலம், அரியலூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்த நிலையில், கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், உள்நாடு, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் மழை காணப்பட்டது.
கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர் என ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்தது. அதிகபட்சமாக சின்னக்கல்லாறு பகுதியில் 150மிமீ மழை பெய்துள்ளது. பாளையங்கோட்டையில் நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது.
அடுத்த ஒரு வாரத்துக்கு, சென்னை உட்பட மாநிலம் முழுவதும் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று ஏற்கனவே வானிலை மையம் கூறியிருந்தது. இந்நிலையில், மேலும் 16 மாவட்டங்களுக்கு கனமழை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு மையம்: இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டின் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, நீலகிரி, மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேநிலை செப்டம்பர் 5ம் தேதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, சென்னை வானிலை மையம் வெளியிட்ட இன்னொரு அறிவிப்பில், இன்றைய தினம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், அரியலுார், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, திருச்சி, சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்யும்.
புதுச்சேரி: புதுச்சேரியிலும், நாளைய தினம் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், இன்று முதல், செப்டம்பர், 3, 4, 5-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளதால், அடுத்த ஒரு வார காலத்துக்கு தமிழக மாவட்டங்களே மழையில் நனைய கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications