சென்னை உட்பட தமிழகம் முழுக்க பரவலாக மழை.. 2 நாட்களுக்கு தொடரும்.. இடி தாக்கி 2 பேர் பலி
Recommended Video
சென்னை: தமிழகத்தில் நேற்று, சென்னை, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்த நிலையில், இன்னும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மழைக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணம். சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று மழை கொட்டியது.இடி மின்னலும் காணப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தர்மபுரி மாவட்டம், புதுக்கோட்டை, நாகை, நெல்லை மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. நெல்லையில் நேற்று மாலை இடியுடன் கூடிய கனமழை காரணமாக சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியில் பீமன் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தொடர்மழை இதற்கு காரணமாகும்.
திருவள்ளூர் மாவட்டம் பேரத்தூர் கிராமத்தில் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த 7 பேர் இடி மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்தனர். அதில், அன்னபூரணி என்பவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பலியானார்.
பரமக்குடி அருகே வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சந்தியாகு என்ற 70 வயது மூதாட்டி இடி மின்னல் தாக்கி பலியானார். நேற்றைய தினத்தில் ஒரே நாளில் இடி மின்னல் தாக்கியதில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனிடையே, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.