புயல் கரையை கடந்திருக்கலாம்.. இனிதான் உள்மாவட்டங்களில் பலத்த மழை பெய்யப்போகிறது.. மக்களே உஷார்!
Recommended Video
சென்னை: கஜா புயல் இன்று அதிகாலை நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையை கடந்து விட்டாலும், இனி தான் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வங்கக் கடலில் உருவான புயல் இன்று அதிகாலை நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. அப்போது அதிராம்பட்டினம் பகுதியில் அதிகபட்சமாக 111 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.
இந்தப் புயல் முழுமையாக கரையை கடப்பதற்கு காலை 9 மணி வரை ஆகும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது.
கஜா முழுமையாக கரையை கடக்க மேலும் 1 மணி நேரம் ஆகும்.. வானிலை மையம் அதிர்ச்சி!
தரை வழியாக
இந்த புயல் கரையை கடந்த பிறகு, தமிழகத்தின் தரைப் பகுதி வழியாக பயணிக்கும். இது மேற்கு ,மற்றும் வட வடமேற்கு திசையில் பயணிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு வழியாக அரபிக்கடலை நோக்கி இந்த புயல் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் பாதை
எனவே, புயல் செல்லும் பாதையில் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் அமைந்துள்ள, கடலூர் நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யக்கூடும்.
பலத்த மழை
கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். புயலின் தாக்கம், கர்நாடக மாநிலம் பெங்களூரு, ராம்நகர், மண்டியா, மைசூர், சாம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்களிலும் எதிரொலிக்கும் என்றும், அங்கும் இன்று மிதமானது முதல் ஓரளவுக்கு பலமான மழை மதியத்திற்குப் பிறகு பெய்யக்கூடும் என்றும் வானிலை இலாகா தெரிவிக்கிறது.
22 மாவட்டங்கள்
புயல் காரணமாக, தமிழகத்தில், கடலூர் துவங்கி கோவை வரை 22 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 18 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் சேர்த்து விடுமுறை என்பது புயலின் தாக்கத்தை யூகிக்க செய்வதாக உள்ளது.