காற்றின் திசைவேக மாறுபாட்டினால் 10 மாவட்டங்களில் மழை பெய்யும் - வானிலை மையம்
காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக வடகடலோர மாவட்டங்களிலும் தமிழகத்தில் 10 மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் காற்றின் திசைவேக மாறுபாடு வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்திற்கு வடகடலோர மாவட்டங்களிலும் சேலம், தருமபுரி, ஈரோடு நீலகிரி கோவை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், அரியலூரில் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 20ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூர் கோவை மாவட்டம் வால்பாறை ஆலந்தூர் சென்னை விமான நிலையம், நாமக்கல், செம்பரம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது
தென்மேற்கு அரபிக்கடலில் மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மைய அறிக்கை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications