சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு டமால், டுமீல்..தமிழகத்தில் 22ம் தேதி வரை மழை தொடரும்..வானிலை அறிக்கை
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை மேலும் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னையில் பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே பகல் வேளையில் வெயில் வாட்டி வதைத்தது. இதனால், வீடுகள், அலுவலகங்களில் மின் விசிறி, ஏ.சி. போன்ற மின்னணு எந்திரங்கள் எப்போதும் இயங்கின.
வீட்டை விட்டு வெளியில் சென்று வந்தாலே வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடும் அல்லல் படும் நிலை இருந்தது. கடந்த சில வாரங்களாகவே இதே நிலை நீடித்து வந்த நிலையில், சென்னையில் நேற்று திடீரென மழை பெய்தது.

சென்னையில் மழை
சென்னையிலுள்ள அண்ணாநகர், திருமங்கலம், முகப்பேர், கொளத்தூர், பாடி, வளசரவாக்கம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ததால், சாலையில் தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்தது. மேலும் வில்லிவாக்கம் சுற்றுவட்டாரத்தில் பெய்த மழையால் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பத்தால் தகித்துக் கொண்டிருந்த சென்னையை குளிர்விக்கும் வகையில் பெய்த இந்த மழை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

5 நாட்களுக்கு மழை பெய்யும்
இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. குறிப்பாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் 5 நாட்களுக்கு (22 ஆம் தேதி வரை) மழை தொடரும் எனவும் சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது. இடி, மின்னலுடன் சென்னையில் மழை தொடரும். வளி மண்டல கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

வானிலை ஆய்வு மையம் அறிக்கை
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் அதாவது வரும் திங்கள் கிழமையை பொறுத்தவரை தமிழ்நாடு , புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை
வரும் 21 ஆம் தேதியை பொறுத்தவரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். 22 ஆம்தேதி கடலோர தமிழக மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கடந்த 24 மணி நேரத்தில்..
நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்ப நிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளதாகவும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications