லெப்ட்ல போயாச்சு.. ரைட்ல திரும்பியாச்சு.. பேசாம யுடர்ன் போட்ரலாம்.. திமுகவுக்கே திரும்பும் கண்ணப்பன்
திமுகவில் இணைய போகிறார் அதிமுகவின் ராஜ கண்ணப்பன்
சென்னை: திரும்பவும் முதல்ல இருந்தா... திமுகவிலேயே போய் சேர்ந்துவிட போகிறாராம் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன்!
அனைத்து ஜாதியினரை திருப்திப்படுத்தும் வகையில் ஒவ்வொரு தேர்தலின்போதும் திட்டங்கள், வியூகங்கள் வகுக்கப்படும். இதில் கருணாநிதி, ஜெயலலிதா கறாராகவும், அனைத்து தரப்பினரையும் அணைத்து செல்லக்கூடியவர்களாகவும் இருந்தனர்.
அதில் முக்கியமானவர்கள் யாதவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை போன்ற மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

வாக்கு சேகரிப்பு
அதனால்தான் யாதவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் ராஜகண்ணப்பனுக்கு வழக்கம்போலவே அதிமுக இந்த முறை சீட் தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் பாராளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி, இடைத்தேர்தல் என எது நடைபெற்றாலும் ராஜகண்ணப்பன் கால் பதித்து வாக்கு சேகரிக்காத தென்மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களின் எந்த குக்கிராமமும் இருக்காது.

அதிருப்தி
ஆனால் இதெல்லாம் தெரிந்தும்கூட கண்ணப்பனுக்கு அதிமுக சீட் தரப்படவில்லை. இதற்கு உள்கட்சி பூசல், சில அமைச்சர்களின் தலையீடுகள், கண்ணப்பன் மீதுள்ள பொறாமை.. போன்றவை காரணமாக சொல்லப்பட்டது. இதனால் அதிர்ச்சியானது கண்ணப்பன் மட்டுமில்லை, யாதவ சமுதாய மக்களும்தான். அதனால்தான் அதிமுகவை கண்டித்து போஸ்டர் ஒட்டி எதிர்ப்பையும் தெரிவித்தனர்.

திமுக
வேட்பாளர் பட்டியல் வெளியிடும் வரை பொறுத்து பொறுத்து பார்த்த கண்ணப்பன், அதில் தன் பெயர் இல்லை என்றதும், கோபத்தில் ஒரே நாளில் திமுக தலைவரை சந்தித்து சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களுக்கு ஆதரவு தரும் நிலைக்கு ஆளானார்.

வேலூர்
இந்நிலையில் கண்ணப்பன் அறிவாலயத்தில் திமுக தலைவரை சந்தித்து பேசியுள்ளார். அத்துடன் வேலூர் பாராளுமன்ற தேர்தலுக்கும் தனது ஆதரவை தெரிவித்து வந்துள்ளார். இதை பற்றி அவர் பேசும்போது,"வேலூர் தொகுதியில் எங்களது சமுதாய ஓட்டுகள் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது.

பிரச்சாரம்
அதனால் வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறேன். திமுகவில் இணைவது குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருகிறேன். வேலூர் தேர்தல் முடிந்த பின்னர் அதுகுறித்து முடிவெடுக்கப்படும். அடுத்த மாத தொடக்கத்தில் திமுகவில் இணைவேன்" என்றார்.

லாபம்
இதன்மூலம் 2 விஷயங்கள் தெரிய வருகிறது. ஒன்று, ஒன்றிரண்டு அமைச்சர்களை கூட சமாளிக்க முடியாமல், அவர்களை அடக்கக்கூட திறன் இல்லாமல் யாதவ மக்களின் சதவீத வாக்கு வங்கியை நடந்து முடிந்த தேர்தலிலும், நடக்க போகும் தேர்தலிலும் அதிமுக பெரும்பாலும் இழக்கவே செய்கிறது. மற்றொன்று, நம்பி வந்தவர்களுக்கு பெரிய பொறுப்பு கொடுத்து அழகு பார்க்கும் திமுக, இப்போது ராஜகண்ணப்பனையும் தன்பக்கம் இழுத்து போட்டு, அச்சமுதாய வாக்குகளை அள்ள போகிறது.












Click it and Unblock the Notifications