அஜித் அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு ஓகேவா.. தாராளமா வரட்டுமேங்க.. ராஜேந்திர பாலாஜி செம!
அஜித் அரசியலுக்கு வந்தால் வரவேற்பதாக ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்
சென்னை: "அஜித் அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு ஓகேவா.." என்ற கேள்விக்கு "நல்லவங்க வந்தால் ஏற்று கொள்ள வேண்டியதுதான். அதில் தப்பே இல்லையே... தாராளமா வரட்டுமே" என்று பதில் அளித்துள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
ரஜினி, கமலுக்கு அடுத்தகட்டமாக விஜய் அரசியலுக்கு வருவதாக அடிக்கடி பேச்சுக்களும், சலசலப்புக்களும் எழுந்து அடங்கும். ஆனால் இப்படி ஒரு சலசலப்பு அஜித் விஷயத்தில் அவ்வளவாக வந்தது இல்லை. ஆனால் ஜெயலலிதா விஷயத்தில் 2 முறை அஜித் பெயர் அடிபட்டது.
ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, அஜித் சென்று பார்த்ததாக நம்பத்தகாத தகவல்கள் வெளிவந்தன. இன்னொரு முறை, அஜித்தை அழைத்து பேசிய ஜெயலலிதா, "உங்களுக்கு மனைவி, குடும்பம் இருக்கிறார்கள். இவ்வளவு பயங்கரமான சண்டை காட்சிகளிலோ அல்லது கார், பைக் ரேஸ்களிலோ அதிகமான ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று அன்புக்கட்டளை போட்டு அறிவுறுத்தியதாகவும் சொல்லப்பட்டது.

ஜெயலலிதா
அது மட்டுமில்லை, இருக்கும் நடிகர்களிலேயே அஜித்தை தனக்கு பிடிக்கும் என்றும் அதற்கு காரணம் அவரது நேர்மையும், தன்னம்பிக்கையும்தான் என்றும் ஜெயலலிதா சொன்னதாகவும் செய்திகள் வெளிவந்தன. இதற்கு பிறகு, ஜெயலலிதா மறைந்த சமயத்தில் பல்கேரியாவில் ஷூட்டிங்கில் இருந்த அஜித், திரும்பி வந்தவுடன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

சசிகலா
ஆனால் அன்று இரவே போயஸ் இல்லம் சென்று சசிகலாவை சந்தித்ததாகவும், அஜித் போன்ற ஒரு பிரபலத்தின் ஆதரவு சசிகலாவுக்கு இருப்பதை காட்டிக் கொள்வதற்காகவே இந்த சந்திப்பு நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் பரபரத்தன. இறுதியில், தனக்கு அரசியலில் வர இஷ்டம் இல்லை என்று அஜித் பகிரங்கமாக அறிக்கை விட்டதும், இருந்த கொஞ்ச நஞ்சம் சந்தேகமும் போய்விட்டது. ஆனால் இதை இப்போது திரும்ப கிண்டி உள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. சன் டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில், அஜித் பற்றின கேள்வி முன்வைக்கப்பட்டது.

விஜய்
அப்போது, "சோஷியல் மீடியாவில் பார்க்கும்போது, நீங்க எப்பவும் அஜித்துக்கு ஆதரவாக பேசிறதாவே இருக்கு. அஜித்தின் தீவிர ரசிகர் ராஜேந்திர பாலாஜி என்று ரசிகர்கள் உங்களை கொண்டாடுறாங்க. இன்னொரு பக்கம் விஜய்யின் ரசிகர்கள் உங்களை திட்டி தீர்க்கறாங்க. என்ன காரணம்.. விஜய்-அஜித் இவங்களை ஒப்பிட்டு சொல்லுங்களேன்" என்று கேள்வி எழுப்பப்பட்டது.

தில்
அதற்கு பதிலளித்த அமைச்சர், "அஜித் ஒரு அதிசய உலகின் நாயகன். எல்லா தரப்பு மக்களுக்கும் அவரை பிடிக்கும். விஜய் நடிப்பையும் பிடிக்கும். ஆனால் ரொம்ப பிடிச்சது அஜித். எப்பவுமே நான் ரஜினி படங்களை விரும்பி பார்ப்பேன். பாட்சா போன்ற படங்களில் ஒரு தில்லு இருக்கும். சமூகத்தை எதிர்த்து தில்லா போராடி, பேசக்கூடிய அளவுக்கு நடிப்பு இருக்கிறது ரஜினிதான்.

பிம்பம்
அதே மாதிரி, அடிபட்டு, காயப்பட்டு கிடப்பவன், எழுந்து நடந்தால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம் அஜித். அது அவர் படத்துல இருக்கும். அடிமேல் அடி வாங்கி, காயப்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு, அல்லல்பட்டு நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு பிறகு பிம்பமாக எழுந்து ஒளியாக மலர்ந்து அதன் மூலமாக எதிரிகளை அழிக்கின்ற காட்சிகள் நிறைய வரும். அது இளைஞர்களுக்கு ரொம்ப பிடிக்கும். ரஜினி, அஜித் படத்தை பார்க்கும்போது, நாமளும் இப்படி ஆகணும்னு நினைப்போம். மத்தவங்க படத்தை பார்க்கும்போது, இப்படி நினைப்பு வராது. படம் நல்லா இருக்குன்னு மட்டும்தான் நினைப்போம்.

வரட்டுமேங்க...
"சரி, அஜித் அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு ஓகேவா.." என்று கேள்வி கேட்க, அதற்கு அமைச்சர், "நல்லவங்க வந்தால் ஏற்று கொள்ள வேண்டியதுதான். அதில் தப்பே இல்லை. என் அரசியலுக்கு அஜித் வரக்கூடியதா? வரட்டுமே.. நல்ல மனிதர், மனைவி குழந்தையோடு சந்தோஷமாக வாழ்பவர், பந்தா இல்லாதவர், ஒரு இடத்துக்கு வந்தால், போனால், யாருக்கும் இடைஞ்சல் தராமல் வந்துட்டு போகக்கூடியவர். அப்படிப்பட்டவரை நாடு ஏற்றுக் கொள்ளும். அதனால வரட்டும்" என்றார்.
ஒரு ரசிகர் என்ற முறையில் அமைச்சர் இப்படி சொல்கிறாரா, இப்போது அஜித்தின் ஆதரவு அதிமுகவுக்கு தேவைப்படுகிறதா என்பது தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்!












Click it and Unblock the Notifications