ஒரே நாளில் கட்சி, கொடி, கொள்கை, வேட்பாளர்.. கலக்கும் மாஜி "பாமக:" ராஜேஸ்வரி பிரியா!
தென்சென்னையில் ராஜேஸ்வரி பிரியா போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்
சென்னை: ஒரே நாளில் கட்சி ஆரம்பித்து, கொடியை அறிமுகப்படுத்தி.. கொள்கையை சொல்லி, தேர்தலில் போட்டியிட போவதாக கூறி வேட்பாளரையும் அறிவித்துவிட்டார் ராஜேஸ்வரி பிரியா!
அதிமுக கூட்டணியுடன் பாமக சேர்ந்ததுமே பலருக்கு அதிருப்தியை தந்தது. அதனால் பாமகவிலிருந்தே 2 முக்கியனவர்கள் வெளியே வந்துவிட்டார்கள். ஒருவர் ரஞ்சித், மற்றொருவர் ராஜேஸ்வரி பிரியா!
ரஞ்சித் அமமுகவில் போய் சேர்ந்துவிட்டார். ராஜேஸ்வரி பிரியா கமல் அணியில் இணைவார் என்ற ஒரு தகவல் பரவியது. ஆனால் அது பொய்யாகி போனது.
அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முழு விவரம் இதோ..
புதிய கட்சி
இந்நிலையில், வேறு யாருடனும் கூட்டணி வைக்காமல் தனிகட்சியை தில்லாக தொடங்கி உள்ளார் அவர்! 'அனைத்து மக்கள் அரசியல் கட்சி' என்று கட்சிக்கு பெயர். அது மட்டுமில்லை, வரும் தேர்தலில் போட்டியிடவும் போகிறாராம்.
மாநில உரிமைகள்
வடசென்னைத் தொகுதியில் தானே களமிறங்குவதாகவும், மயிலாடுதுறையில் இன்னொரு இளைஞரை களமிறக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். ‘‘மாநில உரிமைகளில் எவ்வித பாரபட்சமும், சமரசமும் செய்துகொள்ளாமல் இந்திய இறையாண்மையின் ஆளுமைக்கு உட்பட்டு நடப்போம்" என்ற உறுதிமொழியையும் இவர் அளித்துள்ளார்.
அரசியல் பாடம்
உண்மையிலேயே இது பாராட்டத்தக்கது. ஒரு கட்சியில் இருந்து ஒருவர் வெளியேறினால் இன்னொரு கட்சிக்கு தாவுவதும், அல்லது அந்த கட்சியில் ஒட்டி கொள்வதும்தான் இவ்வளவு கால அரசியல் பெருமளவுக்கு நமக்கு காட்டிய பாடம்.
வாழ்த்துக்கள்
ஆனால் இந்த இளம் வயதிலேயே ஒரு பெண்ணாக இருந்து, அதுவும் தனித்து கட்சி ஆரம்பித்து, போட்டியிடவும் போவதாக அறிவித்திருப்பது, மக்கள் கவனத்தை ஈர்த்து திசை திருப்பி உள்ளது. இவரது செயல்பாடுகளும் ஆழ்ந்து கவனிக்கப்பட்டே வருகிறது. வாழ்த்துக்கள் மேடம்!