நடிகர் விஜயின் பேச்சு சிறுபிள்ளைத்தனமாக உள்ளது! தளபதியாக பார்க்கணுமா? ராஜேஸ்வரிபிரியா சாடல்!
சென்னை: நடிகர் விஜயின் பேச்சு சிறுபிள்ளைத்தனமாக உள்ளதாகவும் தன்னை நடிகராக பார்க்கச் சொல்லாமல் தளபதியாக பார்க்கச் சொன்னது ஏன் எனவும் அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா வினவியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;
விஜய் பேச்சு சிறுபிள்ளைத்தனம்: ''சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் என்று பதில் கூறி இருக்கும் நடிகர் விஜய் அவர்கள் தன்னை ஒரு சினிமா நடிகனாக மட்டும் பாருங்கள் என்று கூறாமல் தளபதியாக பார்க்க சொல்கிறார். தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் இருப்பதாகவும் மாணவர்கள் குடிப்பதில்லை என்றும் பேசுவது மிகவும் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.''

மழுப்பி பேசாதீர்கள் விஜய்: ''நெகட்டிவ் கேரக்டரில் மட்டும் நீங்கள் புகை மதுவை பயன்படுத்தவில்லை.லியோ திரைபடத்தில் பள்ளிக்கு செல்லும் தன் பிள்ளை சிகரெட் குடிப்பதை நேரடியாக அப்பாவிடம் சொல்லும்போது கூட சிகரெட்டின் கெடுதல் பற்றி பேசாத நெகட்டிவ் அப்பாவாகவும் நடித்துவிட்டு காரணம் சொல்லி மழுப்பி பேசாதீர்கள்.''
போதை பொருள்கள் புழக்கம்: ''மக்களை ஆணையிட சொன்னீர்கள். நானும் மக்களில் ஒருவர்தான் இனி மது,புகை காட்சிகளில் நடிக்கமாட்டேன் என நீங்கள் அறிக்கை கொடுங்கள். நல்ல சமூகத்தை உருவாக்க வேண்டிய இடத்தில் இருக்கும் எங்களை போன்றோரால் உங்களது 2 ரவுண்டு பேச்சினை ரசிக்க முடியவில்லை. மாணவர்கள் மத்தியில் மது,கஞ்சா,புகை மற்றும் பல போதை பொருள்கள் புழக்கத்தினை கண்ணெதிரே காண்பிக்கத் தயாராக உள்ளேன்.''
கடும் விமர்சனம்: இளைஞர்களை மது குடிக்கவும், புகை பிடிக்கவும் தூண்டுவதா? என நடிகர் விஜய்க்கு கடந்த ஜூன் மாதமே கேள்வி எழுப்பியிருந்த ராஜேஸ்வரிபிரியா, லியோ படத்தின் முதல் பாடல் முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருப்பதாகவும் அம்மாக்களின் சாபம் நடிகர் விஜயை சும்மா விடாது எனவும் விமர்சித்திருந்தார். இதனால் நடிகர் விஜயின் ரசிகர்கள் ராஜேஸ்வரி பிரியாவை சமூக வலைதளங்களில் வசைபாடினர். இப்போது மீண்டும் நடிகர் விஜயை விமர்சித்திருப்பதால் மீண்டும் அவரது ரசிகர்கள் ராஜேஸ்வரி பிரியாவை சமூக வலைதளங்களில் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications