ஆபாச டிரஸ்.. கலாச்சார சீரழிவு.. வேண்டாம் பிக் பாஸ்.. தடை செய்யுங்கள்.. வெடித்தது போராட்டம்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக ராஜேஸ்வரி பிரியா ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்
சென்னை: சமுதாயத்தையும், சிறுவர்களையும், இளைஞர்களையும் சீரழிக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி வேண்டவே வேண்டாம் என்று அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பில் ராஜேஸ்வரி பிரியா சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாமகவில் இருந்து துணிந்து முதலில் பிரிந்து வெளியே வந்தவர்தான் ராஜேஸ்வரி பிரியா. யாருடனாவது கூட்டணியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரையுமே நம்பாமல் தனியாகவே ஒரு புதிய கட்சியை சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர்.
இவர் கட்சியில் இருந்து வெளியே வந்ததும், கமலை உடனடியாக சந்தித்து பேசினார். அதனால் எப்படியும் மய்யத்தில்தான் இணைவார் என்ற பேச்சு எழுந்து.. பின் அது பொய்யானது! அது மட்டுமில்லை.. இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை இவர் வறுத்தெடுத்து வருவதுடன், கமலையும் சேர்த்து விமர்சித்து வருவது இணையத்தில் வைரலானது.
கோபம்
"இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நமக்கு எதுக்கு? இதில் கலந்து கொள்ளும் வெளி மாநில ஆட்களுக்கு நம் மாநிலத்தை பற்றி எதுவுமே தெரியாது.. கலாச்சாரம், பண்பாடு இது எதுவும் இல்லை. ஒன்னு, இவங்களுக்கு ஒரு விளம்பரம் வேணும், இன்னொன்னு பணம் வேணும். இதில் கலந்து கொள்பவரின் கோபம், ஈகோ, சண்டை இதெல்லாம் நாம தெரிஞ்சிக்கிட்டு என்ன பண்ண போறோம்?
தமிழர்கள்
ஆபாசமா டிரஸ் போட்டுக்கிட்டு, படுத்துக்கிட்டு, பேசிக்கிட்டு... 60 கேமிராக்கள் இருப்பது உங்களுக்கு சாதாரண விஷயமா இருக்கலாம். ஆனால் எங்க குழந்தைங்க நாளைக்கு அதே மாதிரி இருக்கணும்னா நாங்க என்ன பண்றது? இது தமிழர்களுக்கே சம்பந்தமே இல்லாத ஒரு நிகழ்ச்சி.
எதிர்க்கிறேன்
என்ன ஆர்மி? நம்ம ராணுவத்தில் நிஜமாவே செத்து போறவங்களை பத்தி ஏதாவது கவலை இருக்கா? எந்த ராணுவ வீரரையாவது இவர்கள் ஹீரோவா ஏத்துட்டு இருக்காங்களா? ஏன் விவசாயத்தை பத்தி நிகழ்ச்சி நடத்தலாமே, ஏன் நடத்தல? 2 குழந்தைக்கு நான் தாய். அதனால ஒரு பெற்றோர் சார்பாக எதிர்க்கிறேன்" என்று இவர் பேசிய பல வீடியோக்கள் இணையத்தில் றெக்கை கட்டி பறக்கின்றன!
ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியை தடை செய்ய தன் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டமே நடத்திவிட்டார் ராஜேஸ்வரி பிரியா. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தார். இது சம்பந்தமான போஸ்டர்களும் சென்னை முழுக்க ஒட்டப்பட்டது. அதில், "சமுதாயத்தை சீர்குலைக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளை தடை செய்ய விரும்பும் அனைவரும் பங்கேற்கலாம்" என்றும் ராஜேஸ்வரி பிரியா அறைகூவல் விட்டிருந்த நிலையில் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.